2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 3ஆம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (21) மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இந்த கன்னி வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் அரசின் வருமானமாக 4990 பில்லியன் ரூபாவும், செலவீனமாக 7190 பில்லியன் ரூபாவும் துண்டுவிழும் தொகையாக 2200 பில்லியன் ரூபாவும் காட்டப்பட்டிருந்தது.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்
2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதி வரையிலான 7 நாட்கள் இடம்பெற்று 25ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்திற்கு 19 நாட்கள் ஒதுக்கப்பட்டு பெப்ரவரி 27ஆம் திகதி முதல் இன்று 21ஆம் திகதிவரையில் விவாதம் இடம்பெறும் நிலையிலேயே மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |