உயர்தர பரீட்சையில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தினைப்பெற்று மட்டக்களப்பு மாணவன் சாதனை
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் முதலாம் இடத்தினைப்பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியை சேர்ந்த தமிழ்வாணன் துவாரகேஸ் என்ற மாணவன் உயிரியல் துறையில் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவனுக்கு குவியும் பாராட்டுக்கள்
இதனையடுத்து இன்று அவரது இல்லத்திற்கு சென்று கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் ஆகியோர் சாதனை படைத்த மாணவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தனது வெற்றி தொடர்பில் சாதனை படைத்த மாணவன் கருத்து தெரிவிக்கையில்,
நான் மருத்துவதுறையில் விஞ்ஞானியாக பல கண்டுபிடிப்புகளை செய்ய வேண்டும் என்பதே எனது இலட்சியம். மாணவர்கள் கல்வியினை திட்டமிட்டு கற்க வேண்டும். சரியான முறையினை தேர்வு செய்து கற்கவேண்டும். கஷ்டப்பட்டு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் எந்தவித பிரயோசனமும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைத்திய நிபுணர் தமிழ்வாணன், வைத்தியர் பகீரதி தம்பதியினரின் இரண்டாவது மகனான துவாரகேஸ் பாடசாலை மட்டம், மாகாண மட்டம், தேசிய மட்டங்களில் பல சாதனைகளை படைத்துள்ளதுடன்,இவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


