ஹிஸ்புல்லா - இஸ்ரேல் பதற்றத்தின் தீவிரம் : லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது 20 ரொக்கெட்டுகள் தாக்குதல்
இஸ்ரேலின் வடபகுதியில் லோயர் கலிலீ என்ற இடம் நோக்கி லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இன்று(07)ரொக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சில ரொக்கெட்டுகளை இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் வான் பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தி முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதல் பற்றிய எச்சரிக்கை
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.34 மணியளவில் லெபனானின் எல்லையையொட்டிய ரமோத் நப்தாலி பகுதியில் ரொக்கெட் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எனினும், எந்தவித பாதிப்போ அல்லது உயிரிழப்போ பதிவாகவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த வியாழக்கிழமை, ரொக்கெட் மற்றும் ஆளில்லா விமானம் ஆகியவற்றை கொண்டு வட இஸ்ரேலின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் பெரிய அளவில் நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் அதிகாரி ஒருவர் பலியானார்.
தங்களுடைய படை தளபதிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேல் படையினர், 200 ரொக்கெட்டுகள் மற்றும் வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் 20 ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 28 வயது இஸ்ரேல் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து உள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |