வவுனியாவில் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது!
வவுனியா நகரத்தில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா யாழ் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வாகனம் ஒன்றில் வந்த இருவர் உணவுப்பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.
குறித்த வாகனத்தினை சுகாதார பரிசோதர்கள் பரிசோதனை செய்ய முற்பட்ட போது விற்பனையாளர்களினால் அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.இதனால் அந்த பகுதியில் சற்றுநேரம் குழப்பநிலை ஏற்பட்டது.
இருவர் கைது
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதனால், உணவில் நச்சுவாயுக்கள் கலக்கும் சந்தர்ப்பம் ஏற்படுவதுடன் அந்தபகுதியில் கழிவுநீர் வழிந்தோடும் கால்வாயும் காணப்படுகின்றது.
எனவே இவ் வாகனத்தை வேறு பகுதிக்கு எடுத்துச் சென்று அங்கே விற்பனை செய்யுமாறு சுகாதார பரிசோதகர்களால் தெரிவிக்கப்பட்ட போதும் விற்பனையாளர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.
இதனையடுத்து, சுகாதார பரிசோதகர்களால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
