2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி : திறைசேரி செயலாளருக்கு கோப் குழு அவசர அழைப்பு
திறைசேரி கணக்கிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அழைப்பு விடுத்துள்ளது.
இச்சம்பவம் குறித்த தீவிரத்தைக் கருத்திற்கொண்டு நாளை(29) திறைசேரி செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவில் முன்னிலையாக வேண்டும் என அதன் தலைவர் ஹர்ஷ டி சில்வா எம்.பி. அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறப்படும் கருத்துக்கள்
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, "அதிகாரிகளை அழைப்பதற்கான தீர்மானம் குழுவின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
பொது நிதி மீதான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. நிலையியற் கட்டளைகளின்படி அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தும் அதிகாரம் கோப் குழுவுக்கு உண்டு.

இதனை ஒரு தேசியப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும். கட்சி சார்பான பார்வைகளால் இதற்குத் தீர்வு காண முடியாது. நிதி அமைச்சில் பாரிய சிக்கல் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி அதிகாரிகளுடன் சேர்ந்து மத்திய வங்கி ஆளுநருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
"எந்த மோசடியும் நடக்கவில்லை" என நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறப்படும் கருத்துக்கள் குறித்து எச்சரித்த அவர், எதனையும் முன்கூட்டியே வகைப்படுத்த வேண்டாம் எனவும், பொறுப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.