1983 கறுப்பு யூலை : கவனயீர்ப்பு போராட்டமும் கருத்தாடலும் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!
தமிழினத்தின் மீதான சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக அமைந்த 1983 - கறுப்பு யூலையினை மையப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்றும், இணையவழி கருத்தாடலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஆறாப்பெருந்துயராகவுள்ள 1983 கறுப்பு யூலை தமிழின அழிப்பு நாட்களின் 38வது ஆண்டு நினைவினையொட்டி இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று (யூலை23 - 2021) வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் பிரதமர் வாயில் தளத்தில் இடம்பெற இருக்கின்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் நீதிக்காகக் குரல்கொடுக்க, கோவிட் வைரஸ் பெருந்தொற்று சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய மாலை 3 மணிக்கு அணிதிரளுமாறு நாடுகடத்தத் தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
தொடர்ந்து பன்னாட்டு வல்லுநர்கள் பங்கெடுக்கும் இணையவழி கருத்தாடல் நிகழ்வொன்று ஐரோப்பிய நேரம் மாலை 6மணிக்கு இடம்பெற இருக்கின்றது.
'1983 ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலும் தமிழினப் படுகொலைக்கான திட்டமும்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற இருக்கின்ற இக்கருத்தாடலை நா. தமிழீழ அரசாங்கத்தின் வலைக்காட்சி www.tgte.tv ஊடாகவும், பிற ஊடகங்கள் வழியாகவும் காணமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.