லெபனானில் மனிதாபிமான நெருக்கடி: நாளொன்றுக்கு 19,000 சிறுவர்கள் இடம்பெயர்வு
லெபனானில் தீவிரமடைந்து வரும் வன்முறை காரணமாக சுமார் 10 லட்சம் மக்கள் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக யுனிசெஃப் (UNICEF) அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், நாளொன்றுக்கு சராசரியாக 19,000 சிறுவர்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
கடந்த 21 நாட்களில் மட்டும் சுமார் 3,70,000 சிறுவர்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இது ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் நூற்றுக்கணக்கான பாடசாலை பேருந்துகள் நிறைய சிறுவர்கள் தங்கள் உயிரைக் காக்க ஓடுவதற்கும் சமம் என்று யுனிசெஃப் லெபனான் பிரதிநிதி மார்கோலூய்கி கோர்சி தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்வு
இந்தக் கடுமையான போரினால் இதுவரை லெபனானில் 121 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 395 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
வான்வழித் தாக்குதல்களால் நீர் நிலைகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதால், சுத்தமான குடிநீர் மற்றும் கல்வி கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 435 பொதுப் பள்ளிகள் தற்போது அகதிகள் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளதால், 1,15,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டிடங்கள், பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் தங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கோரிக்கை
யுனிசெஃப் அமைப்பு தற்போது களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள், குடிநீர் மற்றும் குளிர்கால உடைகளை வழங்கி வருகிறது.

இருப்பினும், மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பல இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்த மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், குழந்தைகள் மீண்டும் பாதுகாப்பான மற்றும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்றும் யுனிசெஃப் கோரிக்கை விடுத்துள்ளது.
கார்க் தீவில் அமெரிக்க இராணுவத்திற்கு காத்திருக்கும் பேராபத்து - ட்ரம்பிற்கு ஈரான் புகட்டப்போகும் வரலாற்றுப் பாடம்
டிரம்பை உன்னிப்பாகக் கவனிக்காத இலங்கை அரசாங்கம்! மூடப்படும் நிலையில் தொழிற்சாலைகள் - பகிரங்க குற்றச்சாட்டு