மூதூர் படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று
மூதூரில் அக்ஷன் பாம் (ACF) நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் கடந்துள்ளன.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04.08.2023) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி 17 வருடங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
17 பணியாளர்கள் படுகொலை
2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இதன்போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.
குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இப்படுகொலையில் முத்துலிங்கம் நர்மதன், சக்திவேல் கோணேஸ்வரன், ரிச்சட் அருள்ராஜ் சிங்கராஜா பிறீமஸ், ஆனந்தராஜா மோகனதாஸ் ரவிச்சந்திரன், ரிஷிகேசன், கனகரத்தினம் கோவர்த்தனி, கணேஷ் கவிதா, செல்லையா கணேஷ் சிவப்பிரகாசம் ரொமிலா, வயிரமுத்து கோகிலவதனி, அம்பிகாவதி ஜெயசீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரைராஜா கேதீஸ்வரன், யோகராஜா கோடீஸ்வரன், முரளீதரன் தர்மரட்ணம், ஏ.எல்.மொகமட் ஜப்பா, ஆகியோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
மூதூர் பொது வைத்தியசாலைக்கு அருகில் இயங்கிவந்த அக்ஷன் பாம் எனும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த மேற்படி 17 பணியாளர்களையும் ஆயுதம் தரித்த குழுவினர் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்து நிலத்தில் தள்ளி தலையில் சுட்டு படுகொலை செய்ததாக அன்றைய செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



