இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1600 கிலோ மஞ்சள் பறிமுதல்
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.14 லட்சம் இந்திய மதிப்பிலான 1600 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூடைகளை மரைன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நடவடிக்கையானது இன்று(14) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
சர்வதேச கடல் எல்லையில்
இராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் கடல் அட்டை, கஞ்சா, சமையல் மஞ்சள், சுக்கு, பீடி இலை பண்டல்கள், வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
இதனை தடுப்பதற்காக இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இலங்கை இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பகுதிகளில் மரைன் பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கு சமையல் மஞ்சள் மூட்டைகள் கடத்த இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மரைன் பொலிஸார் வேதாளை கிராமத்தில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது பூட்டி இருந்த வீட்டில் இருந்து சமையல் மஞ்சள் வாசனை அதிக அளவு வந்ததால் வீட்டை உடைத்து சோதனை செய்தபோது வீட்டில் 40 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 1600 கிலோ எடையுள்ள சமையல் மஞ்சள் மூட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சமையல் மஞ்சளின் இந்திய மதிப்பு 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும், வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரித்து வருவதுடன், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மரைன் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




