இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதல்: மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு(Video)
முல்லைத்தீவு ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினர் நோயாளர் காவு வண்டி மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஆறு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கிளைமோர் தாக்குதல்
இராணுவத்தினரின் இந்த தாக்குதலால், அந்த நோயாளர் காவுவண்டியில் பயணித்த பாடசாலை சீருடையுடன் சென்ற மாணவிகளான நாகரத்தினம் பிரதீபா (வயது-16), நாகரத்தினம் மதிகரன் (வயது-15), நித்தியானந்தன் நிதர்சனா (வயது-13), கருணாகரன் கௌசிகா (வயது-15), சந்திரசேகரம் டிறோஜா (வயது-16), அற்புதராசா அஜித்நாத் (வயது-17)ஆகிய ஆறு மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை குறித்த தாக்குதலில் சுகாதாரத் தொண்டர்கள் சண்முகவடிவேல் சகுந்தலாதேவி (வயது-19), மாரிமுத்து கிருஸ்ணவேணி (வயது-21) ஆகியோருமாக எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு
இந்த உறவுகளின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மாணவர்களின்நினைவிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நினைவு தினத்தில் பொது சுடரினை, சம்பவத்தில் பலியான மாணவிகளில் ஒருவரான சந்திரசேகரம் டிறோசாவின் தந்தை சந்திரசேகரம் ஏற்றி வைக்க சம நேரத்தில் ஏனைய உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் புகைப்படங்களை வைத்து அதற்கான மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.