விசேட சுற்றிவளைப்பின் போது சுமார் 150 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு
கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளிக்குடா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது யாழ். மன்னார் வீதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 150 கிலோகிராம் எடையை உடையதாக இருக்கும் என கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ள நிலையில் விசாரணைகளின் பின் மேலதிக விசாரணைகளுக்காகவும், நடவடிக்கைக்காகவும் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.