மணல் இல்லாமையால் முறிகண்டி குளத்தின் அபிவிருத்தி பணிகள் 15 நாட்களுக்கு மேலாக தடை
முறிகண்டி குளத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு மணல் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்கள் காணப்படுவதாகவும், இதனால் 15 நாட்களுக்கு மேல் கட்டுமான பணிகளை முன்னெடுக்க முடியவில்லை எனவும் கமக்கார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள், அணைக்கட்டுக்கள் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் முறிகண்டி குளத்தினை அபிவிருத்தி செய்யும் பணிகள் 07.02.2021இல் ஆரம்பிக்கப்பட்டது.
9 மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டிய குறித்த வேலைத்திட்டத்தின் பணிகள் மணல் இல்லாமையினால் கடந்த 15 நாட்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒப்பந்தக்காரர்களான திருமுறிகண்டி கமக்கார அமைப்பு தெரிவிக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் குறித்த குளம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளது.
குறித்த குளத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க முடியாத நிலையில், இவ்விடயம் தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர் காதர் மஸ்தான் உள்ளிட்டவர்களிற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து நாள் ஒன்றுக்கு 100க்கு மேற்பட்ட டிப்பர்களில் மணல் ஏற்றிச் செல்லப்படுகின்ற போதிலும், பிரதேசத்தின் அபிவிருத்திக்கு மணல் பெற்றுக்கொள்ள ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் அனுமதி வழங்கவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ரி.அகிலனிடம் வினவியபோது,
குறித்த கட்டுமான பணிகளிற்கு மணல் பெற்றுக்கொள்ள இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கனியவள திணைக்கள உத்தியோகத்தர்கள் 27ஆம் திகதி இடத்தை பார்வையிட்ட பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பணிகள் தாமதிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பருவ மழை பெய்யக்கூடிய நாட்கள் நோக்கி நாட்கள் கடக்கும் அபாய நிலை காணப்படும் என்பதுடன், நீரைச் சேமிக்க முடியாத நிலையும் ஏற்படும் எனப் பிரதேச விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
குறித்த குளம் சுமார் 40 வருடங்களின் பின்னர் இவ்வாண்டு முழுமையாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது. குறித்த குளத்தில் பல ஆண்டுகளாக நீர் சேமிக்கப்படாமையால் பல குடியிருப்புக்கள் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டது.
குறித்த குளத்தின் அபிவிருத்திகள் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டால் வெள்ள அனர்த்தத்திலிருந்து மக்கள் பாதுகாக்கப்படுவர் என்பதுடன், 25 ஏக்கருக்கு மேற்பட்ட சிறுபோக செய்கையும் மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கை வெளியிடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.