மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் அவசர விசேட கோரிக்கை
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள கருத்து நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மற்றும் அது தொடர்பான விடயங்கள் வழங்கப்பட்டுள்ளமை நாட்டில் பிளவுகளுக்கு மேலும் வழி வகுக்கும்.
13ஆவது திருத்தச் சட்டமானது நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்ந்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை முன்னைய ஜனாதிபதிகள் அனைவரும் தவிர்த்ததாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.