அதிகார பரவலாக்கலுக்கு இந்தியா உதவும்:13 வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என இந்தியா நம்புகிறது
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரத்தை பரவாலாக்க இந்தியா உதவும் எனவும் 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு இருப்பதாகவும் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் கே. அண்ணாமலை, யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள இலங்கை சென்றிருந்த கே. அண்ணாமலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
கடந்த 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், அதன் பின்னர் சமய தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், யாழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் சந்தித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அண்ணாமலை,
" இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய கொண்டு வரப்பட்ட 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அண்மையில் கொழும்புக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
வடக்கு, கிழக்கில் அமைதி மற்றும் சிறந்த பொருளாதார நிலைமையை ஏற்படுத்த இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. வடக்கு, கிழக்கு மக்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.
அத்துடன் அதிகாரத்தை பரவாக்க இந்தியா உதவும். எமது வெளிவிவகார அமைச்சர் வெளியிடும் கருத்துக்கள் இநதிய பிரதமரின் சார்பில் வெளியிடும் கருத்துக்கள்.
அது இந்தியாவின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு. இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்து என்ன கூறினாலும் அது கட்டாயம் நடக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதற்கு இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கும்" என கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.