காரில் கொண்டுவரப்பட்ட 120 பந்தய புறாக்கள் பாம்பன் துறைமுகம் அருகே பறிமுதல்
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தி வருவதாக க்யூ பிரிவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றி வளைத்து சோதனை செய்தபோது
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கும் மிக அருகில் இருப்பதால் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதுடன் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு கடல் வழியாக பல பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் கியூ பிரிவு, மத்திய, மாநில உளவுத்துறை, கடற்படை, கடலோர காவல் படை, சுங்கத்துறை, மரைன் பொலிஸ் என பாதுகாப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு பந்தய புறாக்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு ராமநாதபுரம் ஆய்வாளர் ஜீவமணிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு கியூ பிரிவு பொலிஸ் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் பாம்பன் பாலத்தில் மறைந்து இருந்து கண்காணித்து வந்தனர்.
இன்று அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்த கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் பாம்பன் சாலை பாலத்தில் வெகு நேரமாக நின்று கொண்டு இருந்ததை கண்ட கியூ பிரிவு பொலிஸ் சந்தேகத்தின் பெயரில் சுற்றி வளைத்து சோதனை செய்தபோது காருக்குள் ஆறு இரும்பு குடைகளில் 120 புறாக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
தப்பிச்சென்ற நாட்டுப் படகு
இதனையடுத்து காருடன் பந்தைய புறாக்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் காரில் வந்த மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நவாப் செரிப் (22) மற்றும் மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (39) இருவரையும் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே காரை கியூ பிரிவு பொலிஸார் புறாவுடன் காரை பறிமுதல் செய்த பின் கடற்கரையில் சோதனை செய்ய சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்று கியூ பிரிவு பொலிஸாரை கண்டதும் அங்கிருந்து கடலுக்குள் தப்பி சென்றுள்ளது.
இதனையடுத்து தப்பிச்சென்ற நாட்டுப் படகு குறித்து மரைன் பொலிஸார் உதவியுடன் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில் பந்தய புறாக்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டது என ஒப்புக்கொண்டுள்ளனர்.
இலங்கைக்கு கடல் வழியாக பந்தய புறாக்கள் கடத்தப்பட்டு பிடிபட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri