விரைவில் 11 இனவாத குழுக்களுக்கு இலங்கையில் தடை! - அமைச்சர் அறிவிப்பு
இலங்கையில் செயற்படும் 11 இனவாத குழுக்களை விரைவில் தடை செய்யவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தூண்டிய காரணங்கள், அது முன்னெடுக்கப்பட்ட விதம், அதன் இலக்குகள், நிதி கிடைத்த வழி வகைகள் உட்பட உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தாக்குதலுடன் தொடர்புடைய 676 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் 200 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 66 பேர் தடுப்பு உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள். பிணையில் விடுவிக்கப்பட்டோரும் விசாரிக்கப்படுகிறார்கள்.
இதற்கு மேலதிகமாக தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. அரசாங்க புலனாய்வுப் பிரிவு செயலிழந்தமையால் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.
தற்போதைய அரசாங்கம் புலனாய்வுப் பிரிவை மீண்டும் வலுப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுடன் தொடர்புடைய 54 வெளிநாட்டவர்கள் 5 நாடுகளின் உதவியோடு கைது செய்யப்பட்டார்கள்.
இதில் 50 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். 5 வயது தொடக்கம் 16 வயதான சகல பிள்ளைகளுக்கும் அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கமைய கற்பிக்கப்படுவது அவசியமாகும். இதற்கு முரணான சகல பாடசாலைகளும் தடை செய்யப்படவிருக்கின்றன.
மத்ரஸா பாடசாலைகளை கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒழுங்குறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் இயங்கும் 11 தீவிரவாத அமைப்புகள் இனங்காணப்பட்டுள்ளன.
அவற்றைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவருக்கு எதிராக உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படுவதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.