மியன்மார் இராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி: ஐ.நா கண்டனம்!
மியன்மாரில் இராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதல் நேற்றைய தினம் (11.04.2023) சாஜைங் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரில் சாஜைங் பகுதியில் வசிக்கும் இராணுவ ஆட்சிக்கு எதிரானவர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் இருந்த நிலையில், நேற்றைய தினம் இராணுவம் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
இராணுவ தாக்குதல்
கூட்டமாக நின்று கொண்டிருந்த மக்களை நோக்கி, ஹெலிகொப்டர் மூலம் இராணுவம் குண்டுகளை வீசியுள்ளது.
இந்த வான்வழித் தாக்குதலில் இதுவரை 100 பேர்வரை உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் சில பத்திரிகையாளர்களும் அடங்குவர். மேலும், இந்தத் தாக்குதலை ஒப்புக் கொண்டுள்ள மியன்மார் இராணுவம், அதற்கு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, “அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் எதிர்ப்பாளர்கள் அமைப்பின் அலுவலகம் சாஜைங் பகுதியில் காலை எட்டு மணியளவில் திறக்கப்பட இருந்தது. அப்போதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
இராணுவம் ஆட்சி
முன்னதாக, இராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள் முடக்கப்படுவார்கள் என்று மியன்மார் இராணுவம் அண்மையில் தெரிவித்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க இராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியன்மார் அரசுக்கும், இராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியுள்ளது.
ஐ.நா கண்டனம்
மேலும், ஆங் சான் சூகி, மியன்மார் ஜனாதிபதி யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் இராணுவம் வைத்தது. மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் எதிர்த்த நிலையில், இராணுவம் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் மியன்மாரின் தேசியக் கட்சிகளின் அங்கீகாரத்தை இராணுவம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres), கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
