பெரியகல்லாறில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 10 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 10 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக பெரியகல்லாறு 02ஆம், 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பெரியகல்லாறு உதயபுரம் பகுதியில் மரண வீடு ஒன்றில் கலந்துகொண்ட 43 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரனின் ஆலோசனையின் கீழ் அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்குப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் பெரியகல்லாறு 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகளில் 80 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஏனையவர்களும் தொடர்ச்சியாகத்
தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்குப்படுத்தப்படுவார்கள் எனப் பணிப்பாளர் வைத்தியர்
நா.மயூரன் தெரிவித்துள்ளார்.



