யாழில் 30 ரூபாய்காக நடத்துனரை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞர் கைது
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியால் சேவையில் ஈடுபடும் தனியார் சிற்றூர்தி நடத்துனர் ஒருவர் குறித்த சிற்றூர்தியில் பயணித்த இளைஞர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் அருகே நேற்று( 4) இளைஞர் ஒருவர் குறித்த சிற்றூர்தியில் ஏறி பயணித்துள்ளார்.
குறித்த இளைஞர் 100 ரூபாவை கொடுத்து நடத்துனரிடம் பலாலி சந்தி என குறிப்பிட்டு டிக்கெட் எடுத்துள்ளார். நடத்துனர் மீதி 10 ரூபாயை இறங்கும் போது தருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நடத்துனரிடம் கடுமையாக முரண்பாடு
இதன்போது குறுக்கிட்ட இளைஞர் 70 ரூபாய் டிக்கெட்டுக்கு எதற்கு 100 ரூபாய் வாங்குகிறாய் என நடத்துனரிடம் கடுமையாக முரண்பட்டுள்ளார்.

அதற்கு நடத்துனர் எங்களுக்கு பயணிகளிடம் கூடுதலாக பணம் அறவிட வேண்டிய அவசியமில்லை, சிற்றூர்தியின் கதவுக் கண்ணாடியில் கட்டண விளக்கம் ஓட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெளிவடையுமாறு கூறியுள்ளார்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
கோண்டாவில் சந்தியில் மீண்டும் குறித்த இளைஞர் முரண்பட்டதனை தொடர்ந்து 100 ரூபாவை இளைஞரிடம் வழங்கிய நடத்துனர், எங்கள் சிற்றூர்தியில் இருந்து இறங்கி பின்னுக்கு வரும் சிற்றூர்தியில் ஏறி வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து கையில் வைத்திருந்த தலைக்கவசத்தால் நடத்துனரைத் தாக்கிய இளைஞர், சிற்றூர்தியின் படியில் இருந்து நடத்துனரை கீழே தள்ளி விழுத்தியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் பொலிஸார் இருதரப்பையும் விசாரித்ததனை தொடர்ந்து குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர். இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.