கொழும்பில் இளம் பெண் உயிரிழப்பு - வைத்தியருக்கு எதிராக தடை
வத்தளை தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்தியரின் அலட்சியத்தால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வைத்தியரின் சத்திர சிகிச்சைக்கு தடை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சர்ச்சையாக மாறிய சத்திர சிகிச்சை
சர்ச்சைக்குரிய வைத்தியரால் மேற்கொள்ளப்பட்ட முன்னைய சத்திரசிகிச்சைகளினால் பல நோயாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 13ஆம் திகதி ஜா-எல, தெலத்துர பகுதியைச் சேர்ந்த புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். திருமணமாகி 17 நாட்களில் ஏற்பட்ட சிறு நோய்க்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
அவரது பித்தப்பையின் ஒரு பக்கத்தில் கல் இருப்பதாகக் கூறிய மருத்துவர், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி கடந்த மாதம் 31ஆம் திகதி வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதிதீவிர சிகிச்சை பிரிவு
எனினும் சத்திரசிகிச்சையின் பின்னர் கவலைக்கிடமான நிலைக்குள்ளாகியுள்ளார். அதன் பின்னர் ராகம போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த 25ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் அலட்சியத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மரணத்திற்கு பின் அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வருவதால் இந்த சம்பவம் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.