யாழில் ஆலயத்திற்கு பூஜை செய்ய சென்ற பட்டதாரி இளைஞர் திடீரென உயிரிழப்பு!
யாழில் ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் அந்த ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மானிப்பாய் - சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடல் சுகயீனம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனுக்கு கடந்த14ஆம் திகதியில் இருந்து உடல் சுகயீனம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் மானிப்பாயில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்தநிலையில் ஏழாலை - மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் குறித்த இளைஞன் பூஜை செய்வதற்காக நேற்று காலை சென்றுள்ளார்.
இதன்போது அங்கு அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் அதனை தந்தைக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினார்.
பின்னர் உறவினர்கள் அங்கே சென்று பார்த்தவேளை குறித்த இளைஞன் அசைவற்று காணப்பட்டார்.
உயிரிழப்பு
இதன்போது அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நுரையீரலில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



