ஐக்கிய நாடுகள் சபையின் வாய்மூல அறிக்கை பழைய பல்லவிதான்..!
ஐக்கிய நாடுகள் சபையின் வாய்மூல அறிக்கை பழைய பல்லவிதான் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில், "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகளை மேம்படுத்துதல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், சமகால நிலவரம் என்பவை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் வாய்மொழி மூல அறிக்கை கடந்த 3ம் திகதி திங்கட்கிழமை மனித உரிமைகள் பேரவை தலைவரினால் வாசிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மக்கள் எதிர்பார்த்தது போல வாய்மொழி மூல அறிக்கையில் புதிதாக எதுவும் இருக்கவில்லை. இலங்கையை தடவி ஆலோசனை சொல்லும் அறிக்கையாகவே இருந்தது. வழமை போலவே இலங்கை அரசின் செயற்பாடுகள் மெச்சப்பட்டன.
உத்தேச உண்மை
இந்த வகையில் உத்தேச உண்மை மற்றும் ஆணைக் குழுவை அமைக்கும் முயற்சிகள் மெச்சப்பட்டன. ஆலோசனை என்ற வகையில் நீண்ட காலமாக நிலவி வரும் தண்டனை விலக்கீட்டு கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். காணாமல் போனவர் பற்றிய அலுவலகம் செயற்றிறனான முறையில் இயங்க வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் நிகர்நிலைகாப்புச்சட்டம் என்பவை உரிய நியமங்களுக்கமைவாக திருத்தியமைக்கப்படல் வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிவில் செயல்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்புகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பவை முன்வைக்கப்பட்டன. பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், இதுவே சரியான தருணம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நடாத்தும் போராட்டமும் சுட்டிக்காட்டப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை திருப்திப்படுத்தும் வகையில் காணாமல் போனோர் அலுவலகம் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. பிரித்தானியா தலைமையிலான அனுசரணை நாடுகள் சார்பில் பேசிய பிரித்தானியா பிரதிநிதி பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், தொடர்பான பொறிமுறை பாதிக்கப்பட்ட தரப்பினரின் ஆதரவை பெற்றதாகவும், சர்வதேச நியமனங்களுக்கு ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும் எனக் கூறினார்.
பாதிக்கப்பட்ட தரப்பினரின் ஆதரவைப் பெறுவதற்கு என்னென்ன விடயங்களை உள்ளடக்க வேண்டும் என்றோ நல்லிணக்கத்தின் வரைபடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியோ எதுவும் கூறவில்லை. பொறுப்புக் கூறலும் நல்லிணக்கமும் நெருங்கிய தொடர்புடையவை. பொறுப்புக் கூறல் இல்லாமல் நல்லிணக்கத்தை ஒருபோதும் கொண்டுவர முடியாது.
இந்த இரண்டு விவகாரங்களிலும் காத்திரமான செயற்பாட்டை முன்னெடுக்கும் மனவிருப்பு அரசாங்கத்திடம் இருக்கின்றதா? என்றால் இல்லை என்பதுதான் தமிழ் மக்களுக்கு அனுபவ வரலாறாக உள்ளது. பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கும் அதன் வழி தண்டனை விலக்கீடு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் முறையான விசாரணை நடத்தப்படல் வேண்டும்.
நலன் சார் அரசியல்
இது நடைபெற வேண்டு மென்றால் குற்றம் இழைத்தவனும், நீதி வழங்குபவனும் ஒருவனாக இருக்க முடியாது. போர்க் குற்றங்களை இலங்கை அரசே மேற்கொண்டது. அரசின் கட்டளையின் பேரிலேயே இக்குற்றங்கள் இடம் பெற்றிருந்தன. குற்றமிழைத்தவரே எப்படி நீதி வழங்க முடியும். இதனால் தான் தமிழ்மக்கள் சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கின்றனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை இந்த விவகாரம் தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டையே பின்பற்றுகின்றது. உக்ரைன் விவகாரத்தில் ரஸ்யா அரசினை விசாரணை செய்யும்படி கோரவில்லை. உடனடியாகவே குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது. பாலஸ்தீன விவகாரத்திலும் இதே நிலைதான்.
அங்கு குற்றவியல் நீதிமன்றம் பாலஸ்தீன மக்களுக்கு சார்பாக தீர்ப்பையே வழங்கியுள்ளது. இலங்கை விவகாரத்தில் மட்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள்ளேயே விவகாரம் புதையுண்டு கிடக்கின்றது. அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான எந்த முயற்சியும் நடைபெறவில்லை. இத்தனைக்கும் இரண்டு வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகள், அனுசரணை நாடுகளுக்குள் உள்ளன.
தலைமையேற்றுள்ள நாடுகளுக்கு அந்த மன விருப்பு இல்லை என்பதே உண்மையாகும். குறைந்தபட்சம் தங்களது நாட்டு நீதிப்பொறி முறைகுள்ளேயே சில முயற்சிகளை செய்திருக்கலாம். அமெரிக்கா சில முயற்சிகளை செய்தது. என்பது உண்மைதான் ஆனால் காத்திரமாக இருக்கவில்லை. மியான்மார் விவகாரம் கூட குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கின்றது.
இலங்கை மட்டும் விதிவிலக்காக இருக்கின்றது. இதற்கு பிரதான காரணம் இலங்கை தொடர்பான வல்லரசுகளின் நலன் சார் அரசியல் தான. இலங்கைத் தீவு பூகோள ரீதியாக கேந்திர இடத்தில் இருப்பதால் இலங்கை அரசினை பகைத்துக் கொள்ள வல்லரசுகள் விரும்பவில்லை. தற்போது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இந்தியக் கூட்டிற்கும் சீனாவிற்கும் இடையே இலங்கை தொடர்பாக பூகோள அரசியல் போட்டி நிலவுவதால் எப்படியாவது தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக வன்மையாக அழுத்தங்களைக் கொடுக்க அவை தயாராகவில்லை.
ஐ.நா மனித உரிமைகள்
சீனா இங்கு காலூன்றி நிற்பதால் மென் அழுத்தத்தை கைவிடவும் தயாராக இல்லை. சீனாவின் ஆதிகத்திற்கேற்ப அழுத்தங்களும் கூடிக் குறைந்து கொண்டு செல்லும். தங்களுக்கு சார்பான உலக அரசியல் முறைமையை பேண வேண்டும். என்ற நிர்ப்பந்;தமும் வல்லரசுகளுக்கு உண்டு. கோவை மூடப்படாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
வல்லரசுகளின் அரசியல் நலன்களுக்கேற்ப ஐ.நா மனித உரிமைகள் பேரவை செயற்பட வேண்டியிருப்பதனால் பேரவையின் நம்பகத்தன்மை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பேரவையின் அதிகாரத்திற்குட்பட்ட வகையில் செய்யக்கூடியவற்றையும் செய்யவில்லை என்ற விமர்சனம் தமிழ்த்தரப்பிடம் உண்டு. இலங்கை நீதித்துறை நம்பகத்தன்மையற்றது என்ற விடயம் பேரவைக்கு நன்றாகவே தெரியும். பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றும் மனவிருப்பு இலங்கை அரசிடம் இல்லை என்பதும் அதற்குத் தெரியும்.
சர்வதேச யூரர்களின் ஆணைக்குழு அதனைத் தெளிவாகக் கூறியுள்ளது. மீறல் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்கான தன்முனைப்பு இலங்கை அரசாங்கத்திடம் இல்லை என்றும் உள்ளகப் பொறிமுறைகள் போதுமானதல்ல என்றும் அது கூறியுள்ளது.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் உன்னிப்பாகக் கண்காணிப்பது அவசியம் என்றும் கூறியுள்ளளது. தமிழ்க்கட்சிகள் இது தொடர்பாக வடக்கு கிழக்கில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணித்து அறிக்கையிட விசேட அறிக்கையாளர் ஒவரை நியமிக்கும்படியும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அலுவலகங்களை வடக்கு கிழக்கில் நிறுவுமாறும் வேண்டியிருந்தன.
மனித உரிமைகள் பேரவையோ அதற்கு பின்னால் உள்ள வல்லரசுகளோ இது வேண்டுகோளுக்கு பெரிதாக செவிசாய்க்கவில்லை. பொறுப்புக்கூறல் தொடர்பாக அணுசரணை நாடுகள் இரண்டு விடயங்களை முன்வைத்துள்ளன. பாதிக்கப்பட்ட தரப்பினரின் ஆதரவைப் பெற வேண்டும். சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பவையே அவை இரண்டுமாகும். இங்கு பாதிக்கப்பட்ட தரப்பு என்பது தமிழ் மக்களே உடல், உள பொருளாதார ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொறுப்புக்கூறல் பொறிமுறை தமிழ்ப்பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மதத் தலைவர்கள் என்போரின் ஆதரவைப் பெற்றதாக இருக்க வேண்டும். பொறுப்புக்கூறல் தொடர்பான அரசாங்கம் உண்மை அறியும் உத்தேச ஆணைக்குழு, காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், என்பவற்றையே முக்கியமாக சுட்டிக்காட்டுகின்றது.
பேரினவாத மயம்
இந்த மூன்றும் அணுசரணை நாடுகளின் வேண்டு கோளை பூர்த்தி செய்தனவா என்றால் இல்லையென்றே கூற வேண்டும். உண்மை அறியும் உத்தேச ஆணைக்குழு எவ்வாறு அமைக்கப்படப் போகின்றது அதன் கட்டமைப்பு என்ன? உள்ளடக்கம் எவ்வாறு இருக்கும்? பாதிக்கப்பட்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமா?
கட்டமைப்பில் பாதிக்கப்ட்டவர்களின் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்படுவார்களா? என்பது தொடர்பில் எந்த தெளிவூட்டல்களும் இது வரை வழங்கப்படவில்லை. தமிழ் மக்கள் இவ்வாணைக்குழுவினை காலத்தைக் கடத்தும் ஒன்றாகவே பார்க்கின்றனர். தமிழ் மக்கள் தொடர்பான நீதிச் செயற்பாடுகள் ஆணைக்குழுக்கள் பற்றி நீண்ட அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு உண்டு.
திருகோணமலை மாவட்ட குமாரபுரம் படுகொலை, மிருசுவில் படுகொலை, பிரெஞ்சு மனிதாபிமான நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை, பண்டாரவளை பிந்தனுவேவ படுகொலை என்பவற்றில் இலங்கை நீதித்துறை நம்பகத் தன்மையோடு செயற்படவில்லை. நீதித்துறையும் பேரினவாத மயப்பட்டிருப்பதையே அவை காட்டின. ஒன்றில் சரியான தீர்ப்பை வழங்குவதில்லை அல்லது தீர்ப்பை வழங்கினாலும் பொது மன்னிப்பில் விடுதலை பெறுவதே அனுபவமாக இருக்கின்றது.
ஆணைக் குழுக்கள் தொடர்பிலும் இதே அனுபவங்கள் தான். 1987ஆம் ஆண்டு தொடக்கம் இந்த ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 1987 தொடக்கம் 1990 வரை இடம்பெற்ற மீறல்களை விசாரணை செய்வதற்காக 1994ல் மூன்று ஜனாதிபதி ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போதே அவை இடைநிறுத்தப்பட்டன. 1998 ஆம் ஆண்டு இன்னோர் ஜனாதிபதி ஆணைக் குழு உருவாக்கப்பட்டது. அவை 2002 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் நீதித்துறை நடவடிக்கைகளை வலியுறுத்தியது அந்த அறிக்கை கவனத்தில் எடுக்கப்படவில்லை.
2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உண்மை அறியும் ஆணைக் குழு, 1983ஆம் ஆண்டு கலவரங்களை விசாரணை செய்தது. இதன் நிமித்தம் 2004 இல் பாதிக்கப்பட்ட சிலர் இழப்பீடுகளை பெற்றபோதும் பொறுப்புக் கூறல் எதுவும் இடம்பெறவில்லை. திருகோணமலையில் 5 மாணவர்கள் கொலை, மூதூர் பிரெஞ்சு மனிதாபிமான நிறுவனத்தின் 17 பணியாளர் கொலை என்பவற்றை விசாரணை செய்ய 2006 ஆம் ஆண்டு உடலாகம ஆணைக்குழு, உருவாக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
எனினும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. 2010ல் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 வரையான மீறல்களை விசாரணை செய்தது. பல சிபாரிசுகளையும் முன்வைத்தது. ஆனால் அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. போரின் இறுதி வருடங்களில் காணாமல் போனவர்கள் மக்கள் உயிரிழப்புக்கள் என்பவற்றை விசாரணை செய்ய 2013 ஆம் ஆண்டு பரணகம ஆணைக் குழு உருவாக்கப்பட்டது.
இதுவும் பெரிய வெற்றியைத் தரவில்லை. வினைத்திறனற்ற காணாமல் போனோர் அலுவலகம் உருவாகுவதற்கு மட்டும் இது வழி வகுத்தது எனவே ஆணைக் குழுக்களின் மொத்த அனுபவம் தமிழ் மக்களுக்கு பூச்சியமாகவே இருந்தது. இந்த நிலையில் உத்தேச உண்மை அறியும் ஆணைக் குழுவில் நம்பிக்கை வைக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை.
குற்றவியல் நீதிமன்றம்
இந்த அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு காட்டும் உண்மை பொறுப்பு கூறல் தொடர்பாக உள்ளக பொறிமுறைகள் பயனற்றது என்பதே! இதனால் தான் சர்வதேச பொறிமுறையை அவர்கள் வலியுறுத்தி நின்றனர். துரதிஸ்டவசமாக சர்வதேச அரசியல் சூழல் அதற்கான வாய்ப்புகளை இன்னும் கொடுக்கவில்லை. இதனால் போர் குற்ற விவகாரம் முன்னே செல்ல முடியாமல் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள்ளேயே தேங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தேக்கத்தை உடைப்பதற்கு ஒரே வழி விவகாரத்தை குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதுதான். மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடு இவ்வளவுதான். இதற்கு மேல் முன்னேற எந்த வாய்ப்புகளும் இல்லை. பேரவையின் பலவீனமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் ஆற்றல் பேரவைக்கு இல்லை. இதனை அனுசரணை நாடுகள் தான் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் அரசரணை நாடுகள் அதற்கு தயாராக இல்லை. நல்லிணக்க விவகாரங்களிலும் இதே நிலைதான். சாண் ஏற முழம் சறுக்குகின்ற நிலை எனலாம். ஏறத்தாழ 100 வருடங்களுக்கு மேலான இன ஒடுக்குமுறை காரணமாக தமிழ் மக்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்று இருக்கின்றனர். அரசாங்கம் நம்பிக்கையை கொடுக்க வேண்டும்மென்றால் முதலில் நல்லெண்ணத்;தைக் காட்ட வேண்டும்.
[GEYCSPஸ
பறிக்கப்பட்ட காணிகளை மீள வழங்குதல் குடியேற்றங்களை நிறுத்துதல், தொல்லியல் என்ற பெயரில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல், தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கலை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், போராட்டங்கள் நடாத்துபவர்கள் மீது விசாரணைகளை நிறுத்துதல், பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துதல், போன்றவற்றின் மூலம் நல்லெண்ணத்தை காட்டலாம். ஆனால் ஆட்சிக்கு வருகின்ற எந்த அரசாங்கங்களும் இதற்கு தயாராக இல்லை.
இந்நிலையில் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் செயல்பாட்டில் எவ்வாறு தான் நம்பிக்கை வைக்க முடியும் . பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது தாயகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. போராட்டங்களை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடாத்திய பலர் விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர். பாடசாலை விளையாட்டு போட்டியில் இல்ல அலங்காரம் தாயகவடிவில் உருவாக்கப்பட்டமைக்காக ஆசிரியர்களும், மாணவர்களும், விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் அமைப்புகள், நபர்கள் மீதான தடைகள் தொடர்கின்றன.
இந்த சீத்துவத்தில் புலம்பெயர் தரப்பை முதலீடு செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. மொத்தத்தில் தாயகம் திறந்த வெளிச் சிறைச்சாலையாக உள்ளது. சர்வதேச தலையீடு இல்லாமல் நல்லிணக்க முயற்சிகள் காத்திரமாக நிகழப் போவதில்லை. ஜெனிவா தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய களமாக இல்லை.
ஆனாலும் முன்னைய கட்டுரைகளில் கூறியது போல அது தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு மேடை. சர்வதேசம் அமைத்துக் கொடுத்த மேடையாக உள்ளபோதும் அதனை இரத்தம் சிந்திய ஆயுதப் போராட்டம் தந்த மேடை எனலாம். அந்த மேடையை சரிவர பயன்படுத்த தமிழ் மக்கள் தயாராக வேண்டும். தமிழ்த் தேசிய கட்சிகள் இதனை ஒழுங்காக பயன்படுத்துவதில்லை. வரவு செலவு திட்ட வாக்கெடுப்பிலேயே ஒருங்கிணைந்து செயல்பட முடியாத தமிழ்க் கட்சிகள் இதனை ஒழுங்காக பயன்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. சிவில் தரப்பு தான் அதற்கான மார்க்கங்களை கண்டாக வேண்டும்" என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைனுக்காக தீவிரம்... பிரித்தானியா உலகின் மிகப்பெரிய போர் வெறியர் என கொந்தளிக்கும் ரஷ்யா News Lankasri
