மீண்டும் பணிநீக்கம் செய்யவுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம்! அதிர்ச்சியில் ஊழியர்கள்
மைக்ரோசொப்ட்(Microsoft) நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது எக்ஸ்பொக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட் அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பணிநீக்கங்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 69 பில்லியன் டொலர் மதிப்பிலான எக்டிவிஷன் பிலிசார்ட் கையகப்படுத்தலுக்குப் பிறகு லாபத்தை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் எக்ஸ்பொக்ஸ் பிரிவு மீது விழுந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
டியூக் நியூகெமின் இணை நிறுவனர் மற்றும் அனுபவம் வாய்ந்த கேமிங் துறை நிபுணரான ஜார்ஜ் புரூசார்ட், 1000 முதல் 2000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும், இது எக்ஸ்பொக்ஸ் பணியாளர்களில் சுமார் 10% பேரைப் பாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியில் ஊழியர்கள்
மேலும்,சில ஸ்டுடியோக்கள் முற்றிலுமாக மூடப்படலாம் என்றும் கூறப்படுவதால் டெவலப்பர்கள் மத்தியில் மிகுந்த கவலை எழுந்துள்ளது.
இது கடந்த 18 மாதங்களில் எக்ஸ்பொக்ஸ் பிரிவில் நடைபெறும் நான்காவது பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும்.
முன்னதாக மே மாதம், மைக்ரோசொப்ட் தனது கேமிங் பிரிவு மற்றும் பிற வணிகங்களில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த மாத தொடக்கத்திலும் 300இற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.