உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல சதி திட்டம்: புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை படுகொலை செய்யும் ரஷ்யாவின் சதித் திட்டத்துக்கு உதவியாக உளவுத் தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவரை உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இது குறித்து அந்த நாட்டு புலனாய்வு அமைப்பான எஸ்.பி.யு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தெற்கு உக்ரைனின் மைகோலய்வ் பிராந்தியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிடுவதற்காக ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
அப்போது அந்தப் பகுதியில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா சதித் திட்டம் தீட்டியது.
பாதுகாப்பை அதிகரித்த எஸ்.பி.யு
இது குறித்த தகவலை முன்னரே அந்த எஸ்.பி.யு, ஜனாதிபதிக்கான பாதுகாப்பை அதிகரித்தது.
ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக, ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், மைகோலய்வ் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய உளவுத் தகவல்களை அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த ஒரு பெண் சேகரித்து வந்தாா்.
இதனைக் கண்டறிந்த எஸ்.பி.யு அதிகாரிகள், அந்தப் பெண்ணைக் கைது செய்தனா். ரகசியத் தகவல்களை ரஷ்ய உளவு அமைப்புக்கு அனுப்பிக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் கையும் களவுமாக கைது செய்யப்பட்டாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களது அதிகாரிகளால் அந்தப் பெண் கைது செய்யப்பட்ட படத்தையும் முகங்களை மறைத்து எஸ்.பி.யு அமைப்பு வெளியிட்டுள்ளது.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வருகிறது.
ரஷ்யாவின் கைப்பற்றல்
எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.
ஏற்கெனவே உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யா, கடந்த ஆண்டு தொடங்கிய போரிலும் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே அமைந்துள்ள 4 பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி, அந்த பிராந்தியங்கள் முழுவதையும் தங்களது நாட்டின் அங்கங்களாக அறிவித்தது.
அந்தப் போா் தொடங்கியபோதே தன்னை படுகொலை செய்ய ரஷ்யா முயன்றதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினாா்.
இந்த நிலையில், அவரைப் படுகொலை செய்யும் ரஷ்யாவின் சதித் திட்டத்துக்கு உடந்தையாக இருந்ததாக பெண் ஒருவரை உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |