நாயை கொலை செய்த உயர் நீதிமன்ற பெண் சட்டத்தரணி கைது
சட்டத்தரணியின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றுக்கு விஷம் வைத்து கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் உயர் நீதிமன்றின் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (25) கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கஹதுடுவ (Kahathuduwa) பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 12 ஆம் திகதி கிரிவத்துடுவ - தலகலவத்த பிரதேசத்தில் உள்ள மனுதாரரான சட்டத்தரணியின் வீட்டைச் சுற்றிப் பல இடங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிறிய அளவிலான சில பொதிகள் கிடந்துள்ளன.
சிசிரிவி சாட்சியங்கள்
அதனைக் கண்ட பணிப்பெண் சட்டத்தரணிக்கு அறிவித்ததையடுத்து, திடீரென வீட்டில் இருந்து நாய் ஓடிவந்து தரையில் மயங்கி விழுந்துள்ளது.
இதனையடுத்து. கால்நடை மருத்துவரை வரவழைத்து நாயைப் பரிசோதித்தபோது, குறித்த நாய் ஒருவகை விஷத்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 12ஆம் திகதி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீட்டின் முன்புறம் உள்ள பிரதான வாயில் அருகே சிவப்பு நிற வாகனத்தில் வந்திறங்கிய ஒருவர் தோட்டத்துக்குள் சில பொருட்களை வீசுவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கஹதுடுவ பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில், சிசிடிவி சாட்சியங்களைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பதிவு
இதன்போது, குறித்த வாகனம் உயர்நீதிமன்றத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவருக்குச் சொந்தமானது எனத் தகவல் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபரான சட்டத்தரணியை இன்றைய தினம் (25.04.2023) பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்தது அவரிடம், வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, ஐந்து வருடங்களுக்கு முன்னர் முறைப்பாட்டாளரான சட்டத்தரணியைக் கொலை செய்யும் நோக்கில் நான்கு பேர் அவரது வீட்டிற்கு வந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனுதாரரான சட்டத்தரணி மறைந்த பிரபல உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் மகன் எனத் தெரியவந்துள்ளது.