போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கைது
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட நால்வர் மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் முச்சக்கரவண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு தொகுதி போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யு.கே.ஜயந்த தெரிவித்துள்ளார்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினர் போதைப்பொருள் வியாபாரியை போல நடித்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுவிட்டு அறுபதாயிரம் ரூபா பணத்துடன் குறித்த வீட்டிற்குச் சென்ற வேளை போதை மருந்தினை கைமாற்றிய பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பெண்ணின் மூத்த சகோதரி போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சகோதர உறவான இருவரையும் திருமணம் செய்துள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஹெரோயின் பக்கற்றுக்களுடன் மதகு ஒன்றின் மீது அமர்ந்திருந்த மூன்று பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.