இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்த இளைஞன்..!(photos)
புதிய இணைப்பு
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞன் முன்று நாளைக்கு பின் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளார்.
ஈச்சநகர் காட்டில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞனை இராணுவத்தினரும், பொலிஸார் மற்றும் பொது மக்கள் சேர்ந்து இன்று மீட்டுள்ளனர்.
காரணம்
முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சமைத்து சாப்பிடுவதற்காக போனவர்களை தேடி தனியாக சென்ற இளைஞன் கரடி துரத்தியதால் தான் வழிதவறி காட்டிற்கு சென்றதாகவும் இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்ததாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (16) காணாமல் போயிருந்த நிலையில் பொது மக்களின் நீண்ட நேர தேடுதலுக்கு பின் இன்று மீட்கப்பட்டு கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இளைஞனை தேடும் பணி
திருகோணமலை - தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஈச்சநகர் காட்டில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இதேவேளை காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் இராணுவத்தினரும்,பொது மக்களும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த 23 வயதுடய மொஹம்மட் றிஸ்வான் எனும் இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பு
ஈச்சநகர் காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சமைத்து சாப்பிடுவதற்காக வியாழக்கிழமை(16) சென்ற போதே காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
அவ் இளைஞனை இராணுவத்தினரும், அப்பகுதி இளைஞர்களும் இணைந்து தேடி
வருவதாக தகவல்கல் கிடைத்துள்ளது.
இளைஞன் தொடர்பாக தகவல் தெரிவித்த பொலிஸார் "காணாமல் போன இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த போது, தான் காட்டில் உயரமான மரமொன்றில் இருப்பதாக தெரிவித்துள்ளார்"என தெரிவித்தனர்.
இன்றைய தினமும்(18) தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.