நாய் வாலை சுருட்டிக்கொள்வது போல் அரசாங்கத்திற்குள் இருக்கும் நபர்கள்: குமார வெல்கம கடும் தாக்கு
விமல் வீரவங்ச(Wimal Weerawansa) தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகள் அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என்பதை ஜனாதிபதி அறிவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம(Kumara Welgama) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமை சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்த விமல் குழுவினருக்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara), உதய கம்மன்பில(Udaya Gammanpila) தலைமையிலான ஆளும் கூட்டணியில் உள்ள 11 கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்க ஜனாதிபதி மறுத்துள்ளமை தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே குமார வெல்கம இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இந்த அணியினரை அரசாங்கத்திலிருந்து நேரடியாக விரட்டாமல் விரட்டி வருகிறது. எனினும் அந்த அணியினருக்கு வெட்கமில்லை. இந்த அணியினருக்கு உறுதியான தீர்மானத்தை எடுத்து அரசாங்கத்திலிருந்து வெளியேறக் கூடிய முதுகெலும்பு இல்லை.
அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் வெட்கமில்லை. அவர்கள் வெட்கமின்றி தொடர்ந்தும் அரசாங்கத்திற்குள் இருந்து வருகின்றனர்.
அரசாங்கத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரைக் கடுமையாக விமர்சித்த போதிலும் வெட்கமின்றி, நாய் வாலை சுருட்டிக்கொள்வது போல் சுருட்டிக்கொண்டு அரசாங்கத்திற்குள் இருக்கின்றனர் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.