தராதரம் பாராது அனைவருக்கும் தண்டனை பெற்றுக்கொடுப்போம்! அமைச்சர் நாமல்
நாட்டில் உள்ள நடைமுறைச் சட்டத்தின் பிரகாரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு அரசியல் தராதரம் பாராது தண்டனையை பெற்றுக்கொடுப்போம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
விளையாட்டுத்துறைஅமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதகை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுத்திருக்க முடிந்தும் அதனை தடுக்காது செயற்பட்டவர்கள் இன்று நாடாளுமன்றில் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். தாக்குதல்களை தடுக்க முடியாதுபோனவர்கள் எம்மீது விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.
நாட்டு மக்கள் இந்த விடயத்தை அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தாக்குதல்கள் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணைகளுடன் நிறுத்த மாட்டோம்.
உறுதியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனையையும் பெற்றுக் கொடுப்போம். மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை கடந்த அரசாங்கத்தின் சில உறுப்பினர்களின் தலையீட்டில் விடுதலைச் செய்திருக்காவிடின் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது.
அனைத்து விடயங்களையும் தெரிந்துக் கொண்டே இவர்களை விடுதலைச் செய்திருந்தனர். அப்போது விமர்சனங்களை முன்வைக்காதவர்கள் இன்று எம்மை நோக்கி விரல்களை நீட்டுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அனைவருக்கும் நாம் உறுதியாக அரசியல் தராதரங்கள் பாராது நாட்டில் உள்ள நடைமுறைச் சட்டத்தின் பிரகாரம் தண்டனையை பெற்றுக்கொடுப்போம் என்றார்.