தீர்வு கிடைக்கும் வரை வீட்டுக்கு செல்ல மாட்டேன் - மொட்டு கட்சி உறுப்பினர் உண்ணாவிரதம்
யானை மின் வேலி அமைப்பது தொடர்பில் தீர்வு கிடைக்காவிட்டால் வீட்டிக்கு செல்வதில்லை என மொரவெவ பிரதேச சபையின் மொட்டு கட்சி உறுப்பினர் எம்.டி.ரத்னாயக்க உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாாார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7.30 மணி தொடக்கம் திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி ரொட்டவெவ பகுதியில் இடம்பெற்றது.
மொரவெவ பிரதேசத்தில் அனைத்து பகுதிகளுக்கும் யானை மின் வேலிகள் அமைத்து கொடுத்துள்ள போதிலும் அத்தாபெந்திவெவ, மிரிஸ்வெவ மற்றும் ரொட்டவெவ கிராமங்களைச் சுற்றி அளவீடு செய்யப்பட்டிருந்த போதிலும் இன்னும் மின்வேலி அமைக்கப்படவில்லை எனவும், இதனால் இரவு நேரங்களில் யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கிராமத்திற்கு யானை மின் வேலி அமைத்து தருமாறு பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் ,இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பிரதேச சபை உறுப்பினர் இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
யானை வேலி எங்களுக்கு இல்லை மொரவெவயில் யானை இல்லையா? தீர்வு கிடைக்கும் வரை வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்ற பதாதையை ஏந்தியவாறு பிரதேச சபை உறுப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.