சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்க போவதில்லை:அனுரகுமார
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவான சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்குவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி யோசனை முன்வைப்பது சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு அல்ல. அவர் மற்றும் ராஜபக்சவினரின் தலைமையில் உருவாகும் அரசாங்கத்திற்கு ஏனைய குழுக்களின் உதவியை கோருகிறார்.
அதில் நாங்கள் எந்த வகையிலும் பங்குக்கொள்ள மாட்டோம்.சரியாக அனைத்து கட்சிகளுக்கும் சம உரிமை கிடைக்கும் அனைத்து முடிவுகளுக்கு சகல கட்சிகளின் ஒத்துழைப்புகளும் கிடைக்கும் சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பான யோசனையை நாங்கள் முன்வைத்தோம்.
அந்த யோசனை தோல்வியடைந்துள்ளது. அரசாங்கம் நெருக்கடியில் இருந்து மீள குறுகிய கால வேலைத்திட்டத்தை முன்வைத்தால், அதில் உள்ள சாதகமான அடையாளங்களை கவனத்தில் கொண்டு தேசிய மக்கள் சக்தி கருத்துக்களை முன்வைக்கும்.
ஜனாதிபதி எந்த இடத்திலும் சர்வக்கட்சி அரசாங்கத்தின் பொறுப்பு,காலம், அது மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி குறிப்பிடவில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.