மலையகத்தில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு! : தேசிய மின் உற்பத்திக்கும் பாதிப்பு (Photos)
வரட்சியான காலநிலையினையடுத்து மலையக நீர்த்தேக்கங்களுக்கு சமீபமாக நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாத விசமிகளால் தொடர்ச்சியாக தீ வைத்து வருவதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தேசிய மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காசல் ரி நீர்த்தேக்கத்திற்கு கரையோர நீர் போசன பிரதேசமாக காணப்படுகின்றது. இந் நிலையில் வனராஜா கெந்தகொலை காட்டுப்பகுதிக்கு நேற்று இரவு (27) இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளன.
குறித்த பகுதிக்கு தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஊற்றுக்கள் அற்றுப்போவதுடன் சிறிய வகை உயிரினங்கள்,அப் பிரதேசத்திற்கே உரித்தான அறிய வகை தாவரங்கள் ஆகியன அழிவடையும் நிலையினை எதிர்நோக்கியுள்ளன.
வரட்சியான காலநிலையினையடுத்து பல பிரதேசங்களில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதனால் இந்நிலை மேலும் அதிகரித்து நீரின்றி பல்வேறு பிரச்சினைக்களுக்கு முகம் கொடுக்க நேரிடலம் என பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.
இதே நேரம் நீர் போசனை பிரதேசங்களில் உள்ள காட்டுப்பகுதிக்கு தீ வைப்பதனால் தேசிய மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மிருகங்களை வேட்டையாடுவதற்கும் பொழுது போக்குக்காகவும் குறித்த காட்டுப்பகுதிகளுக்கு சில விசமிகளால் தீ வைக்கப்படுவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றனர்.
எனவே வனப்பகுதிகளை விசமிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.