வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும்
ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கை நிறைவடையும் போது கச்சா எண்ணெய்யின் விலை தலைகீழான மாற்றத்தைச் சந்திக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவருடைய கூற்றில் இருந்து பலவாறான பொருள் விளக்கங்கள் தரப்பட்டாலும் அதில் ஒளிந்திருப்பது ஈரானுடைய இறையாண்மையை மீறி எந்தவித நியாய, நீதி, தர்மங்களையும் மீறி ஈரானை அடக்கி, ஒடுக்கி அதனுடைய எரிபொருள் வளங்களை கொள்ளையிட்டு மலிவு விலையில் சந்தையில் விற்பது தான்.
நாட்டின் இறையான்மை
ஈரானை மிக விரைவாக வெற்றி கண்டுவிடலாம் என்ற தவறான கணிப்பீட்டுடன் மேற்படி கூறப்பட்டிருக்கிறது.
இருப்பினும், அதற்குப் பின்னால் ஏற்படக்கூடிய பாரிய படை நடவடிக்கைகளும், அதனால் ஏற்படக்கூடிய உயிர்ச்சேதங்கள், பொருட்சேதங்கள், மற்றும் பல நூறு ஆண்டுகளுக்கான சூழலியல் பாதிப்புகள் பற்றி யாரும் கவனம் செலுத்துவதாக இல்லை.
ஆயினும் இன்றைய சூழலிலும் அது பற்றிய கருத்தாடல்களும் ஆய்வுகளும் தேவையாக உள்ளது. இன்றைய நவீன உலகில் அரசுகளுக்கான இறைமையும் அதற்கான உலகளாவிய பொது நிலைப்பாடுகளும், ஏற்றுக் கொள்ளுகைகளும் பற்றியும் இங்கே கவனத்திற்கு கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அரசுகளுக்கும் இறைமை உண்டு என்றும், அதனை ஏனைய அரசுகள் மதிக்கவேண்டும் என்ற பொதுக்கருத்து முதன் முதலில் ஐரோப்பாவில் 1648-ல் கையெழுத்தான வெஸ்ட்பாலியா அமைதி உடன்படிக்கை ஏற்பட்ட போது உறுதிப்படுத்தப்பட்டது. வெஸ்ட்பாலியா அமைதி உடன்படிக்கை இரண்டு தனி உடன்படிக்கைகளைக் கொண்டது.
(1)ஒஸ்னாப்ரூக் உடன்படிக்கை 15,/05/1648ல் புனித ரோமப் பேரரசுக்கும் ஸ்வீடனுக்கும் இடையில்
(2) மின்ஸ்டர் உடன்படிக்கை 24/10/1648ல் புனித ரோமப் பேரரசுக்கும் பிரான்சுக்கும் இடையில்
இந்த இரண்டும் சேர்ந்தே "வெஸ்ட்பாலியா உடன்படிக்கை" என அழைக்கப்படுகின்றது.
அந்த உடன்படிக்கை அன்றைய ஐரோப்பாவில் 30 ஆண்டுகாலப் போர் (1618–1648) மற்றும் 80 ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது மாத்திரமல்ல நவீன சர்வதேச உறவுகளின் அடிப்படையான அரசின் இறையாண்மை (Sovereignty) மற்றும் மதசுதந்திரக் கொள்கைகளை நிலைநிறுத்தியது
வெஸ்ட்பாலியா உடன்படிக்கை
வெஸ்ட்பாலியா உடன்படிக்கை (1648) நவீன இறையாண்மை என்ற கருத்துக்கு அடித்தளமிட்டது. அந்தக் கருத்துத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் அரசுகளுக்கான சமமான இறையாண்மை பற்றிய ஐநா சாசனத்தின் பிரிவு 2(1)ல் அமைப்பு அதன் உறுப்பினர்களின் இறையாண்மை சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
அதாவது, சிறிய நாடும் பெரிய நாடும் ஒரே மாதிரியான இறையாண்மை உரிமைகளைக் கொண்டவை என்றும் ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாமை பற்றிய தான ஐ.நா சாசன பிரிவு 2(7) "எந்த ஒரு அரசினுடைய உள் அதிகார வரம்பிற்குள் வரும் விவகாரங்களிலும் தலையிட இந்தச் சாசனம் UNக்கு அதிகாரம் அளிக்காது.

" இது வெஸ்ட்பாலியா உடன்படிக்கையில் உள்ள "விவகாரங்களில் தலையிடக் கூடாது" என்ற கொள்கையின் நேரடித் தொடர்ச்சியாகும். அத்தோடு பிராந்திய ஒருமைப்பாடும் அரசியல் சுதந்திரமும் தொடர்பான பிரிவு 2(4) அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.
எந்த அரசினதும் அரசியல் சுதந்திரத்தை எதிர்த்து பலத்தைப் பயன்படுத்துவதை உறுப்பு நாடுகள் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இங்கே ஈரானுடைய இறையாண்மையும், ஐ.நா சாசனமும் முற்று முழுதாக மீறப்பட்டு விட்டது. ஐ.நாவும் தோல்வி அடைந்து விட்டது எனவே புதிய உலக ஒழுங்கிற்கான புதிய சாசனங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டிய அவசியத்தை வளைகுடா யுத்தம் தோற்று வித்திருக்கிறது.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம்
வளைகுடா யுத்தம் என்பது ஆசிய ஐரோப்பிய சந்தைகளுக்கான மையப்பகுதி மாத்திரமல்ல அது உற்பத்தி பண்டங்களுக்கான சக்தி வளங்களை வழங்குகின்ற மையமாகவும் இருப்பதனால் மத்திய கிழக்கை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரால் மாத்திரமே ஏகோபோக நிர்ணய சக்தியாக உருவெடுக்க முடியும்.
அதற்கு இப்போது மத்திய கிழக்கில் தடையாக இருப்பது ஈரான் மட்டுமே. ஆதலால் மத்திய கிழக்கில் ஈராணைக் கட்டுப்படுத்த வேண்டும். ஈரானைக் கட்டுப்படுத்துவது இலகுவான காரியம் அன்று.
வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், புவியியல் அமைப்பு காரணமாகவும் ஈரானை இலகுவில் விழ்த்திவிட முடியாது. அதனை கட்டுப்படுத்துவதற்கான தந்துரோபாயங்களை மாத்திரமே மேற்கொள்ள முடியும்.

அதனையே தற்போது அமெரிக்கா வகுத்து வருகிறது. ஈரானை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுடைய முக்கிய பொருளாதாரம் மையங்கள், ராணுவ கேந்திர நிலையங்கள், அணு ஆராய்ச்சி மையங்களை தாக்கி அழித்திருக்கிறார்கள்.
இத்தகைய தாக்குதல்களில் எண்ணெய் வயல்களோ, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களோ குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு தாக்கப்படவில்லை. காரணம் அமெரிக்காவின் இலக்கு ஈரானை பணியவைத்து அதனுடைய எண்ணெய் வளத்தைக் கொள்ளையிடுவது தான்.
ஆகவே ஈரான் சேமித்து வைத்திருக்கின்ற எண்ணெய் கையிருப்பை சேதப்படுத்தி விடக்கூடாது, தேனீ சேர்த்து வைத்திருக்கும் தேனை வேடன் எடுப்பது போல அமெரிக்கா ஈரானின் எண்ணெய்க்காக காத்திருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
கார்க் தீவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை
இப்போது அடிக்கடி ஈரானின் கார்க்தீவை( Kharg Island) தாக்கப்படும் என்றும், கைப்பற்றப்படும் என்றும் அமெரிக்க அறிக்கைகள் வெளியிடப்படுகின்றது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்க வேண்டும் என்றும், திறக்காவிட்டால் ஹோர்முஸை திறப்பதற்காக கார்க்தீவை கைப்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடுவது பொருத்தமற்ற இராணுவ செயற்பாடான நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும்.
கார்க் தீவை கைப்பற்றுவதனால் கார்க் தீவியில் இருந்து சுமார் 550 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஹோர்முஸ் நீரணையை திறந்துவிட முடியாது. புவியியல் நோக்கு நிலையில் கார்க் தீவில் இருந்து கொண்டு பாரசீக வளைகுடாவை கட்டுப்படுத்த முடியாது.
அதற்கு எதிரான பலமான புவியியல் காரணிகள் உள்ளது. ஈரானிய பெருநிலப் பரப்பின் அமைவிடம், தரைத்தோற்றமும், அதன் காலநிலையும். வளைகுடாக்கடலில் உள்ள ஈரானிய தீவுகள் ஈரானுக்கு சாதகமாகவே உள்ளது. ஒரு யுத்தத்தின் வெற்றி தோல்விகளை இன்று நவீன விஞ்ஞான ஆயுத பலம் தான் தீர்மானித்தாலும் இயற்கையான புவியியல் நில அமைப்புகள் போரை தீர்மானிக்கும் காரணிகளில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

அமெரிக்கா அடிக்கடி கூறும் இன்றைய ஈரானின் கார்க் தீவு என்பது பாரசீக வளைகுடாவின் வடகிழக்கு பகுதியில், பூஷெர் துறைமுகத்திற்கு வடமேற்கே சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஈரானின் பிரதான எண்ணெய் வயல்களுக்கு அருகில் இத்தீவு உள்ளது. தோராயமாக 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தட்டையான பவளப் பாறைத் தீவு.
இது ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 983 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாரசீக வளைகுடாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, ஈரானின் பொருளாதாரத்திற்கும், உலக எண்ணெய் சந்தைக்கும் இத்தீவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதி இத்தீவு வழியாகவே நடைபெறுகிறது.
எண்ணெய் வளங்கள் ஏற்றுமதி செய்யும் தளம்
இது ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி முனையம் ஆகும். இங்கு பெரிய கச்சா எண்ணெய் சேமிப்புத் தொட்டிகள் உள்ளன. ஆழ்கடல் துறைமுக வசதிகள் கொண்ட மிகப்பெரிய சூப்பர் டேங்கர்கள் (VLCCs) கூட நங்கூரமிட முடியும்.
பிரதான நிலப்பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களில் இருந்து குழாய்வழி இணைப்புகள் மூலம் எண்ணெய் இங்கு கொண்டு வரப்பட்டு கப்பல்களில் ஏற்றப்படுகிறது. இங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோ வேதியியல் தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. ஈரான்-ஈராக் போர் (1980-1988): இத்தீவு அதன் மூலோபாய முக்கியத்துவம் காரணமாக போரின் போது ஈராக் விமானப்படையின் கடுமையான குண்டுவீச்சுக்கு இலக்கானது.
எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இத்தாக்குதல்களால் தீவின் கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்தன. போருக்கு பின்னர் புனர் நிர்மாணம் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியான எண்ணெய் கசிவு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் காரணமாக, தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பவளப் பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களும் அழிவுக்கு உள்ளாகி உள்ளது.இந்தத் தீவு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்களின் நுழைவுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.

கார்க் தீவு தற்போது ஈரானிய இராணுவத்தால் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது. வான்பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகுப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டம் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதாரத் தடைகள், கார்க் தீவின் எண்ணெய் ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இருப்பினும், ஈரான் பல்வேறு வழிகளில் ஏற்றுமதியை தொடர்கிறது. எது எப்படியோ கார்க்தீவு ஈரானின் எண்ணெய் பொருளாதாரத்தின் மிக முக்கியமான நரம்பு மையமாகும். ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90%க்கும் மேல் இந்தத் தீவின் முனையங்கள் வழியாகவே நடைபெறுகிறது.
நாளொன்றுக்கு 2 மில்லியன் பேரல்கள் வரை கையாளும் திறன் கொண்டது. இது ஒரு சிறிய புவியியல் பரப்பைக் கொண்டிருந்தாலும், நாட்டின் வருவாயிலும், உலக எரிசக்தி பங்களிப்பிலும் மகத்தான பங்கை வகிக்கிறது. இத்தகைய கார்க்தீவை கைப்பற்றுவதன் மூலம் ஈரானிய அரசை கட்டுப்படுத்துவதற்காக கையாளக்கூடிய இராணுவ நடவடிக்கைகளும் மூலோபாயங்கள் பற்றியும் பார்ப்போம். கார்க்தீவை கைப்பற்றுவதன் மூலம் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கிவிட முடியும்.
ஈரான் பொருளாதாரத்தை முடக்க திட்டம்
என்பதோடு அங்குள்ள சேமிக்கப்பட்ட பெருமளவு கச்சா எண்ணெய்யும் சூறையாட முடியும். ஈரான் மீதான பிடியை இருக்கவும் கட்டுப்படுத்துவதற்கான மூலோபாயமாகவும் இதனைப் பார்க்க வேண்டும். கார்க்தீவு கைப்பற்றப்பட்டால் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான புதிய துறைமுகங்களை தயார் படுத்துவதற்கு ஒரு நீண்ட காலம் தேவைப்படும்.
அது இன்றைய போர் சூழலில் சாத்தியமில்லை. ஆகவே ஈரான் அடிபணிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அவ்வாறு அடிபணியாவிட்டாலும் அடுத்த கட்ட நடவடிக்கையை அமெரிக்கா ஈரானிய பெரு நிலப்பரப்பில் தரையிறங்குவதாகத்தான் இருக்கும்.
கார்க்தீவு அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டால் அராபிய நாடுகளிலிருந்து இலகுவான ராணுவ வழங்கல்களையும் செய்யக்கூடியதாக சாதகத் தன்மைகளை நோக்கினால் ஈரானின் கார்க் தீவிலிருந்து (Kharg Island) அரபு நாடுகளுக்கான தோராயமான கடல்வழியான தூரங்களை பார்த்தால் கத்தார் (தோஹா வரை) சுமார் 180 கி.மீ, பஹ்ரைன் சுமார் 200 கி.மீ, சவூதி அரேபியா (கிழக்கு மாகாணக் கடற்கரை வரை) சுமார் 220 கி.மீ, குவைத் (குவைத் நகரம் வரை)சுமார் 290 கி.மீ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அபுதாபி வரை) சுமார் 320 கி.மீ, ஓமான் (மசிராம் தீவு வரை)சுமார் 580 கி.மீ, ஈராக் சுமார் 340 கி.மீ வரையான தூர அளவிலேயே அமெரிக்கச் சார்பு அரபு நாடுகளின் துறைமுகங்கள் உள்ளன.

இவற்றினுாடான கடல்வழி தொடர்பாடல்களை இலகுவாக்கப்படும் என்பது மாத்திரமல்ல கார்க்தீவில் அமெரிக்காவின் நீண்டகால ராணுவ இருப்புக்கு வழிவகையும் செய்வதாக அமையும்.
அதே நேரத்தில் கார்க்தீவிலிருந்து ஈரானிய நிலப்பரப்பையும் அதனுடைய துறைமுகங்களையும் நோக்கினால் முதல் நிலையில் ஈரானின் பூஷெஹர் துறைமுகத்திலிருந்து(Bushehr Port), பந்தர் கனாவே (Bandar Ganaveh), பந்தர்-ஈ-டேலாம் (Bandar-e Deylam) ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்களை இலகுவாக கட்டுப்படுத்த முடியும்.
பூஷெஹர் துறைமுகம்
இது ஈரானின் தென்மேற்கில் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு முக்கியத் துறைமுகம்.
பூஷெஹர் மாகாணத்தின் தலைநகரும் பெரிய நகரமுமான பூஷெஹர் நகரில் அமைந்துள்ளது. பரசீக கடலில் ஒரு முனையாக நீண்டு செல்லும் நிலப்பகுதியில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகமாகும்.
கார்க் தீவிற்கு வடகிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவில் உள்ளது. வணிகம், மீன்பிடித்தல் மற்றும் இறக்குமதி-ஏற்றுமதிக்கான முக்கிய வாயில். எண்ணெய் அல்லாத பொருட்கள் (பழங்கள், தானியங்கள், கட்டிடப் பொருட்கள்) மற்றும் கொள்கலன் சரக்குகளைக் ஏத்தி இறக்கி கையாளுகின்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம்.
பல துறைமுகக் கப்பல்த்துறைகள், சேமிப்புக் கிடங்குகள், மற்றும் பூஷெஹர் நகரை நாட்டின் உட்பகுதியுடன் இணைக்கும் சாலைப் போக்குவரத்து வசதிகள் கொண்டது.

பண்டைய பாரசீக வளைகுடா வணிகப் பாதைகளில் முக்கிய இடம்.18ம் நூற்றாண்டில் டச்சு மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனங்களின் கீழ் செழித்தது. இன்று ஈரானின் அணுமின் நிலையம் (பூஷெஹர் அணு மின் நிலையம்) இந்தத் துறைமுகத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தெற்கே அமைந்துள்ளது. போர்க் கப்பல்கள் மற்றும் ஈரானிய புரட்சிகர காவலர் படையின் கடற்படைக்கும் இங்கு வசதிகள் உள்ளன.
பாரசீக வளைகுடா நாடுகள் மற்றும் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கான வணிகத்திற்குப் பயன்படுகிறது. இருப்பினும், சர்வதேச பொருளாதாரத் தடைகளால் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. கார்க் தீவு எண்ணெய் ஏற்றுமதிக்கு மையமாக இருந்தால், பூஷெஹர் துறைமுகம் பொதுப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் பிராந்திய வர்த்தகத்திற்குப் பயன்படுகிறது.
பந்தர் கனாவே (Bandar Ganaveh)
ஈரானின் பூஷெஹர் மாகாணத்தில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும். பூஷெஹர் நகரிலிருந்து வடமேற்கே சுமார் 70 கி.மீ. தொலைவில், பாரசீக வளைகுடா கரையோரத்தில் அமைந்துள்ளது.

மீன்பிடி பேரீச்சம்பழம், புகையிலை, கோதுமை. உற்பத்தி பகுதியுமாகும். உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் இறக்குமதித் துறைமுகமாகவும் விளங்குகின்றது.
பண்டைய எலமைட் மற்றும் சாசானிய காலங்களில் இருந்து வணிகத் துறைமுகமாக இருந்தது வந்துள்ளது. கார்க்தீவின் வடக்கே கடல் வழியாக சுமார் 120 கி.மீ அமைந்துள்ளது.
பந்தர்-ஈ-டேலாம் (Bandar-e Deylam)
ஈரானின் பூஷெஹர் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரம். இது பூஷெஹர் நகரிலிருந்து வடமேற்கே சுமார் 150 கி.மீ. தொலைவில், பாரசீக வளைகுடா கரையில் அமைந்துள்ளது.
மீன்பிடி, பேரீச்சம்பழம், கோதுமை, புகையிலை பயிர் செய்கை பிரதேசத்தில் உள்ளது என்பதோடு சிறிய துறைமுகம் உள்ளூர் வணிகபொருட்கள் இறக்குமதி சேவைகள் இடம்பெறும் துறைமுக நகரம்.
தற்போது ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்பின் ஒரு பகுதி இந்தத் துறைமுகம் விளங்குகிறது. இதற்கு அருகிலேயே அசலூயே (Assaluyeh) பெரிய எரிவாயு மையம் அமைந்துள்ளது. கார்க் தீவிலிருந்து வடமேற்கே கடல் வழியாக சுமார் 150–160 கி.மீ அமைந்துள்ளது.
தெஹ்ரானில் இருந்து இந்த மூன்று துறைமுகங்களுக்குமான தோராயமான சாலை வழித் தூரங்களைப் பார்ப்போமேயானால் பூஷெஹர் துறைமுகம் சுமார் 800 கி.மீ. ஆகவும், பந்தர் கனாவே சுமார் 750 கி.மீ ஆகவும் பந்தர்-ஈ-டேலாம் சுமார் 720–740 கி.மீ தூரமாகவும் அமைந்துள்ளன.
அமெரிக்க ஈருடகப் படைகள் தெஹ்ரானிலிருந்து மிக அருகில் நிலையெடுத்து இருக்கக்கூடிய துறைமுகங்களாக இவை உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் நோக்கினால் தற்போதைய வளைகுடா போரில் கார்க்தீவு மூலோபாயம் என்பது ஈரானின் பொருளாதார நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி, ஈரானை அடிபணிய வைப்பதுதான்.
அதற்காக அமெரிக்கா எத்தகைய நீதிக்கு புறம்பான, சர்வதேச சட்டங்களையும், ஐ.நா விதிகளையும் மீறி செயல்படும். இந்த உலகின் நீதியும், சட்டங்களும், வெற்றிபெற்றவர்களினாலேயே நிர்ணயம் பெறுகின்றன.
வெற்றியே தேசிய நலனாகவும், ஆக்கிரமிப்பே நீதியாகவும், ஆக்கிரமிப்பாளன் தனது நலனுக்காக வகுக்கின்ற ஒழுங்கே நீதியாகவும் கொள்ளப்படும் இன்றைய உலக ஒழுங்கில் ஈரானின் மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் வர்த்தக ஏகோபோகத்திற்கான யுத்தத்தின் ஒரு பகுதிதான் என்பதே உண்மையாகும்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam