அழைப்பு வந்தும் மோடியை டக்ளஸ் சந்திக்காதமை ஏன்..! ஈ.பி.டி.பி தரப்பு விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்குக் கால அவகாசம் போதாமையினால் குறித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (07.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இருந்தும் எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர் தொடர்பான எமது வலியுறுத்தல்கள் பாரதப் பிரதமரிடம் ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.
மேலும் அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையிலே, எம்மீது சேறடித்தாவது ஈ.பி.டி.பி. கட்சியை வேலணை பிரதேச சபையிலே தோல்வியடைச் செய்ய வேண்டும் என்ற நோக்குடனேயே இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான சேறடிப்புக்கள் எமது கட்சியைப் பொறுத்தவரையில் புதிய விடயங்கள் அல்ல. கடந்த காலங்களிலும் தேர்தல் காலங்களில் பலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.