காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி
கடந்த வாரம் 22-04-2025 அன்று இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இத்தாக்குதல் இந்தியாவில் மாத்திரமன்றி உலகம் தழுவிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலுக்கு யார் பொறுப்பு ஏற்றால் என்ன? ஏற்காவிட்டால் என்ன? இதன் விளைவுகள் இஸ்லாமிய உலகத்துக்கே பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இத்தாக்குதலைின் பின்னர் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நீடிக்கிறது. இருதரப்பினரும் யுத்தத்துக்கு தயார் என வீரம் முழக்கமிடுகின்றனர்.
தீவிரவாதத் தாக்குதல்
ஆயினும் இது ஒரு போருக்கு செல்லுமா? என்ற கேள்விக்கு இந்தப் பிராந்தியத்தில் ஓரு நேரடிப்போர் முழு அளவில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை. இதுவே இப்பிராந்திய களயதார்த்த நிர்ணயம். ஆயினும் உலக அளவில் போர் பற்றியே பெருமளவு பேசப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களும் அவ்வாறே பேசுகின்றன. ஆயினும் இந்தப் பயங்கரவாத தாக்குதலினால் ஏற்பட்டிருக்கும் விளைவிகள் பற்றி பெரிதாக யாரும் கருத்தில் எடுத்ததாகவில்லை என்பதனால் இதன் பின் விளைவுகள் பற்றி ஆய்வது அவசியமானது.
முதலில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற இடத்தின் அமைவிடத்தினை நோக்கினால் அது ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் உள்ள பஹல்காமில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
பிர்பஞ்சல் மலைத்தொடரில் (Pir Panjal Range) கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7500-8000 அடி உயரத்தில் அமைந்துள்ள பைசரண் பள்ளத்தாக்கிலுள்ள பசுமை நிறைந்த அழகான புல்வெளி. இது இந்தியாவின் பிரபல சுற்றுலாத் தலமாகும். இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான அமர்நாத் யாத்திரையிலும் பஹல்காம் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிவனோடு தொடர்புபடுத்தப்படும் அமர்நாத் குகைகளுக்குச் செல்லும் பாதைகளில் பஹல்காம் வழியாகச் செல்லும் பாதை முக்கியமானது.
அடுத்து தாக்குதல் நடத்தப்பட்ட சூழமைவை நோக்குகின்றபோது இத்தாக்குதலுக்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக 16 -04-2025 அன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற வெளிநாட்டு பாகிஸ்தானியர் மாநாட்டில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் காஷ்மீர் குறித்து உரையாற்றினார்.
அவர் “It was our jugular vein, it is our jugular vein, and we will not forget it. We will not leave our Kashmiri brothers in their heroic struggle.” (“காஷ்மீர் எங்கள் கழுத்து நரம்பாக இருந்தது, அது எங்கள் கழுத்து நரம்பாகவே இருக்கும், அதை நாம் மறக்கமாட்டோம்“) என்று கூறியிருந்தார்.
மேலும், “Our forefathers thought we are different from Hindus in every possible aspect of life—our religions, customs, traditions, thoughts and ambitions. That was the foundation of the two-nation theory that was laid there. We are two nations, we are not one nation.” (“எங்கள் முன்னோர்கள் இந்துக்களிடமிருந்து வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் மதம், பழக்கவழக்கங்கள், மரபுகள், சிந்தனைகள் மற்றும் இலக்குகள் என அனைத்திலும் மிகவும் வேறுபட்டவர்கள் என்று நம்பினர். அந்த நம்பிக்கையே இரு தேசக் கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது.
எனவே நாங்கள் இரு தனித்த தேசங்கள் ஒரே தேசம் அல்ல.”) பாகிஸ்தானின் “இரு நாடுகள் கொள்கை”(Two-Nation Theory) அடிப்படையில் காஷ்மீர் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது பிழையானது என்று வலியுறுத்தும் உரைக்குப் பின்னர் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை என்பது பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது. அத்தோடு ஜூலை 3ம் திகதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது.
சர்வதேச அரசியலில் பெரும் பின்னடைவு
அதேநேரம் கடந்த வாரம் தாக்குதல் இடம் பெற்ற நேரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்று இருந்தார்.
அதே நேரம் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவில் தங்கியிருந்த சமயத்தில் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே கருத இடமுண்டு.
இத்தாக்குதலுக்கு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தயீபாவின் துணை அமைப்பாகக் கருதப்படும் The Resistance Front (TRF) இந்த தாக்குதலுக்கு உரிமைகோரியிருந்தனர்.
காஷ்மீரில் உள்ள இந்திய அரசின் குடியிருப்பு அனுமதிகள் மற்றும் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை எதிர்த்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் நான்கு நாட்களின் பின்னர் TRF தங்களது உரிமைகோரலை திரும்பப் பெற்றமை இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட போர் பதட்டங்களை கவனத்தில் எடுத்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் பதற்றத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்திய பிரதமர் தனது சவுதி பயணத்தை இடைநடவில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினார்.
ஏப்ரல் 24 பொது மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மோசமான தண்டனையைப் பெறுவார்கள்" அன்றும் "ஒவ்வொரு தீவிரவாதியையும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு தண்டிக்கும் என்ற செய்தியை நான் முழு உலகுக்கும் தெரிவிக்கிறேன். எஞ்சியுள்ள தீவிரவாதிகளை மண்ணோடு மண்ணாக அழிக்கும் நேரம் தற்போது வந்துவிட்டது" என்றும் குறிப்பிட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 23 நேரடியாக சம்பவம் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி-வாகா எல்லையை மூடுவது, பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்வது போன்ற பல முடிவுகளை எடுத்தது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் 1972ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. நதிகளின் நீரைத் தடுக்கவோ, அல்லது திசை திருப்பவோ செய்யும் எந்த முயற்சியும் "போர் நடவடிக்கையாக" கருதப்படும் என்றும், இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தெரிவித்திருந்தார்.
அதே வேளையில், பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பிபிசிக்கு அளித்த பேட்டியில், "சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் போர் அறிவிப்பாகக் கருதப்படும்" என்று வலியுறுத்தினார்.
கவாஜா ஆசிப் பி.பி.சி யிடம் கூறுகையில், "நாங்கள் இனிமேல்தான் தயாராகும் வேண்டும் என்றில்லை. ஏற்கெனவே தயார் நிலையில்தான் இருக்கிறோம். எந்தச் சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்," என்றார்.
இவ்வாறு இரு தரப்பும் ஏட்டிக்கு போட்டியாக கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் பொதுமக்கள் மீதான தாக்குதல் என்பது உலக அளவிலான கவனத்தை( global dimension)அல்லது உலகளாவிய தாக்கங்கள் பெற்றிருக்கிறது.
அத்தோடு பன்னாட்டு உறவில் குறிப்பாக ஆசியப் பிராந்தியத்தின் அரசியல் உறவுகளிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் பார்க்கின்ற போது காஷ்மீர் தாக்குதல் என்பது உலகளாவிய அரசியல் அபிப்பிராயத்திலும், ஆசியப் பிராந்திய அரசியல் அபிப்பிராயத்திலும் இந்தியாவுக்கு சார்பான ஒரு கருத்தியல் தோற்றம் பெற்றிருக்கிறது.
பொதுவாக பனிப்போரின் பின்னான உலகளாவிய அரசியலில் போராட்டங்கள், புரட்சிகளில் மக்கள் மீதான படுகொலை தாக்குதல்கள், விமானக் கடத்தல்கள், பணயகைதுகள், பொது இடங்களில் மீதான குண்டு தாக்குதல்கள், ஆட்கடத்தல் போன்றவை தகாதனவாக கழிக்கப்பட்ட மலம் போல மக்களால் பார்க்கப்படுகிறது.
ஒசாமா பின்லேடனின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலுக்கு பின்னர் இந்தக் கருத்தியல் உலக அளவில் பெருமளவு வளர்ச்சி அடைந்து பொதுமக்கள் மீதான ஆயுதப் பிரயோகத்தை இன, மத, பிரதேச வேறுபாடுடின்றி மனித உரிமைகள் என்றும், மனிதநேயம் என்ற அடிப்படையிலும் வெறுக்கப்படும் சம்பவங்களாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய மக்கள் மீதான ஆயுதப் பிரயோக வன்முறைக்கு எதிரான கருத்தியல் மண்டலமும் சிந்தனை முறைமையும் உலகளாவிய மக்கள் மனங்களில் தோற்றம் பேற்றிருக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் தாக்குதல் என்பது இஸ்லாமிய மதத்துக்கு எதிரான ஒரு கருத்தியலை உலகளாவிய அளவில் ஏற்படுத்தி இருக்கிறது.
இத்தாக்குதலினால் இஸ்லாமிய மதத்தவர்களும், முஸ்லிம் சமூகத்தவர்களும் வன்முறையாளர்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை செய்வோர், மனிதநேயமற்றவர்கள் என்ற கருத்தியலை தோற்றுவிப்பதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளது.
இந்தத்தாக்குதல் இஸ்லாமிய உலகிற்கு பெருத்த பின்னடைவாகவும் கருதப்பட வேண்டும். குறிப்பாக அது பாகிஸ்தானின் சர்வதேச அரசியலில் பெரும் பின்னடைவியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவினுடைய புலனாய்வு அமைப்புகள்
இத்தாக்குதல் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில், ஆளும் கட்சிக்கு ஒரு நெருக்கடியை கொடுத்து இருப்பது என்பது உண்மைதான். ஆயினும் இந்திய அரசு என்ற அடிப்படையில் அதற்கு உலகளாவிய ஆதரவை குவித்திருக்கிறது. தாக்குதலின் பின்னர் ரஷ்ய அதிபர் புட்டின் “இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை மாத்திரமன்றி அதற்குக் காரணமாய் இருந்த கைகளையும் ஒட்ட நறுக்கப்பட வேண்டும்“என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் “இந்தியாவோடு தோளோடு தோள் நிற்போம்“ என்கிறார்.
அதேநேரம் அமெரிக்க அதிபர் ”தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும்“ என அறிவித்திருக்கிறார்கள். சீனாகூட இத்தாக்குதலை வன்மையாக கண்டித்திருக்கிறது.
பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள்கூட இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்து இருக்கின்றன. இந்த நிகழ்போக்கை பார்க்கின்ற போது தீவிரவாத தாக்குதல் என்பது இந்தியாவை மேலும் பலப்படுத்தி இருக்கிறது. அதனுடைய பாதுகாப்பு ஒழுங்குகளை மேலும் விஸ்தரிக்க துாண்டியுள்ளது.
இந்தியாவினுடைய புலனாய்வு அமைப்புகளை மேலும் தொழிற்திறன் வாய்ந்ததாக மறுசீர மைப்பதற்கு உதவி இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு மக்களின் தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது.
அதேநேரத்தில் இந்தியாவுக்குள் வாழ்கின்ற 20 கோடி இஸ்லாமியர்களுக்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியது மாத்திரமல்ல அவர்களை குற்றவாளிகளாக பார்க்கும் ஒரு சூழலையும் தோற்றுவித்திருக்கிறது.
இந்நிலையில் தென்னாசிய பிராந்தியத்தில் இந்திய-பாகிஸ்த்தான் போர் என்னும் யுத்தமேகங்கள் சூழ்ந்து இருப்பதான ஒரு தோற்றப்பாடு தோன்றியிருக்கிறது. யுத்தம் நிகழுமா? என்பதற்கு உலகளாவிய ராணுவ ஆய்வாளர்களின் கருத்துக்கள் ஆம் என்றும், இல்லை என்றும் வருகின்றன.
ஆயினும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய பிரித்தானிய பத்திரிகையான The Economist ன்' பாதுகாப்பு ஆசிரியர் ஷஷாங்க் ஜோஷி(Shashank Joshi) "எதிர்வரும் வாரங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று நம்புகிறேன்" என்று எழுதியுள்ளார்.
அவருடைய எக்ஸ் பக்கத்தில், "மே மாதத்தின் கடைசி வாரத்தில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க 60 சதவீத வாய்ப்பு உள்ளது, நான் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய இந்தியாவின் உலகளாவிய அரசியல் பொருளியல் நிலைமையில் இந்தியா பாகிஸ்தானுடன் நேரடியான ஒரு போரை ஒருபோதும் விரும்பாது. நடத்தவும் முனையாது. ஒரு போரை தாம் விரும்பியவாறு நடத்துவதற்கான சுதந்திரமான விருப்பை இந்தியாவால் தெரிவு செய்ய முடியாது(No Free will). அதாவது போருக்கான சுதந்திரவிருப்பு இந்தியாவுக்குக் கிடையாது.
இஸ்ரேல் மீதோ அமெரிக்காவிலோ இவ்வாறு ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு அவர்கள் உடனடியான ஒரு பழிவாங்கல் தாக்குதலை கடுமையாக நடத்துவர். இதேபோன்று இந்தியாவும் தனது தரத்தையும், கௌரவத்தையும் பாதுகாப்பதற்கு தாக்குதலை நடத்தியவர்களையும், அதற்குக் காரணமானவர்களையும் இனங்கண்டு ஒரு பழி வாங்கும் தாக்குதலை நிச்சயம் நடத்துவார்கள்.
ஆனால் அது இந்திய- பாகிஸ்தான் நேரடி போராக இருக்காது என்பதை மட்டும் துணிந்து கூறலாம். மேலும் ஒரு போருக்கு சென்றால் இந்தியாவின் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும்.
அதனுடைய தொழில்துறை பெருவீழ்ச்சி அடையும். பொருளாதார வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அமைதியும், சமாதானமும் தேவை. ஆகவே இன்றைய சூழமைவில் இந்தியா உலகம் தழுவிய அரசியலில் முன்னணிப் பாத்திரத்தை வகிக்க வேண்டுமாக இருந்தால் அது தனது பிராந்தியத்தில் ஸ்திரமாக இருக்க வேண்டும். அந்த இஸ்திரத் தன்மை அடையும் வரைக்கும் அது போரை தவிர்க்க வேண்டும்.
இந்தியாவுக்கு இருக்கின்ற Given reality (தரப்பட்டுள்ள யதார்த்தம்) மற்றும் இருப்பு இயல் நிர்பந்தம் என்பன இந்தியாவை போர்தவிர்ப்பைத்தான் நிர்ணயம் செய்யும்.
எனவே போரை தவிர்த்து பாகிஸ்தானுக்கு எத்தகைய நெருக்கடிகளை கொடுக்க முடியுமோ, எத்தகைய சர்வதேச அழுத்தங்களை கொடுக்க முடியுமோ, எந்த வகையில் சர்வதேச அரசியலிலிருந்து பாகிஸ்தானை ஒரங்கட்ட முடியுமோ அதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளையே மேற்கொள்ளுவர்.
இந்திய அரசாங்கம்
அந்த ராஜதந்திர நடவடிக்கைக்கு இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலினால் இந்தியாவுக்க ஆதரவான உலகம் தழுவிய பொதுமக்கள் அபிப்பிராயத்தை தமக்கு சாதகமாக்கி அந்த உலகம் தழுவிய பொது அபிப்பிராயத்தை கொண்டே தமக்கான அனைத்து அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக செய்வதுதான் இந்தியாவினால் மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த பட்ச எதிர்வினை ஆற்றலாக அமையும்.
அத்தோடு இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள். உலகில் இஸ்லாமிய சாட்டமுள்ள 48 நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே அணு ஆயுதத்தைக் கொண்டுள்ள நாடு. ஆகவே அணு ஆயுதத்தை கொண்டுள்ள நாடுகள் ஒரு யுத்தத்துக்கு செல்வது என்பது இறுதியில் அணு ஆயுத பிரயோகத்துக்கு வழிவகுக்கும்.
அணு ஆயுத பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டால் இந்தப் பிராந்தியத்தில் மனித உயிர்களும், உயிரினங்களும் மாத்திரமல்ல சர்வதேச அளவிலும் தாவரவியலில் குறிப்பாக கோதுமை பயிர் செய்கை முற்றாக பாதிப்படையும். அதனை பலம்மிக்க நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு சிந்தனைக் குழுவாக(Think Tank) செயற்படும் "SIPRI" எனப்படும் “ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்“(Stockholm International Peace Research Institute) 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கைப்படி, இந்தியாவில் 172 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 70 அணு ஆயுதங்களும் உள்ளன என்கிறது. இருப்பினும், இரு நாடுகளும் எத்தனை அணு ஆயுதங்களை வைத்துள்ளன என்ற விவரம் அந்தந்த நாடுகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
இன்றைய உலக அரசியலில் இஸ்லாமிய உலகத்துக்கு எதிரான முதலாவது எதிரி யார்? என்றால் அது இஸ்லாமியர்களிடையே இருக்கின்ற அடிப்படைவாதிகளே இஸ்லாமியருடைய முதலாவது எதிரியாக இருக்கிறார்கள்.
இதனை இன்னொரு வகையில் சொன்னால் அவர்கள் “நண்பனின் வடிவில் உள்ள எதிரிகள்“ என்றுதான் தத்துவவியலில் குறிப்பிட முடியும். இஸ்லாத்துக்கான புதை குழியை இஸ்லாமிய அடிப்படை வாதிகளே தோண்டுகிறார்கள். தமது மக்களை அழிக்க தாமே வழி சமைக்கிறார்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும்.
மொத்தத்தில் இந்த தாக்குதல் மூலம் உலகளாவிய ஆதரவையும் உலகளாவிய பொதுமக்கள் அபிப்பிராயத்தையும் இந்தியா பெற்று இருக்கிறது.
இஸ்லாமிய அடிப்படை வாதிகள் தமது மதத்தினருக்கும், முஸ்லீம் சமுகத்தினருக்கும் அழியாத கரையையும், அவமானத்தையும், அவர்களக்க எதிரான உலகளாவிய பொதுப்பிராயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்தாக்குதல் இந்திய அரசையும் இந்திய அரசாங்கத்தையும் பலப்படுத்தி இருக்கிறது என்று கூறுவதே பொருத்தமானது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
