விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் அவரின் குடும்பத்தாருமே பொறுப்புக் கூற வேண்டும்! எஸ்.பி.திஸாநாயக்க
இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏற்பட்ட பேரழிவிற்கு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், அவரது குடும்பத்தாருமே பொறுப்புக்கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க(S.B.Dissanayakke) தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாக அமையும். இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும், மனித உரிமை ஆணையாளருக்கும் கிடையாது.
காணாமல்போனார் விவகாரமும், தமிழ் பிரச்சினையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் தங்களின் சுய தேவைக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்பில் நல்ல நிலைப்பாடு ஏதும் கிடையாது. இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் போனோருக்கு நேர்ந்ததை அவர்களின் உறவினர்கள் நன்கு அறிவார்கள்.
இருப்பினும் தற்போது காணாமலாக்கப்பட்டோரை தேடி தருமாறு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏற்பட்ட பேரழிவிற்கு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், அவரது குடும்பத்தாரும் பொறுப்புக்கூற வேண்டும்.
இராணுவத்தில் சரணடைவதற்கான ஆயுதங்களை எறிந்த போராளிகளையும், இராணுவத்தினர் வசம் நோக்கி சென்ற தமிழர்களையும் புலிகள் அமைப்பின் பிரதான தரப்பினரே கொன்றனர்.
இந்த மனித உரிமை மீறல் குறித்து மனித உரிமை பேரவை ஆராயவில்லை. நாட்டில் காணப்படும் உள்ளக பிரச்சினைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்(Gotabhaya Rajapaksha)ஷ முரண்பாடற்ற தீர்வை வழங்குவார். எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டின் சுயாதீனத்தன்மைக்கும், பொதுச்சட்டத்திற்கும் உட்பட்டதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.