வவுனியா பல்கலைக் கழக மாணவனின் மரணத்திற்கு காரணம் என்ன...
தனது ''மகனும் படித்து பல்கலை சென்று நல்லதொரு அரச உத்தியோகம் செய்து எமது குடும்பத்திற்கு ஒரு கௌரவத்தை தருவான்'' என பெற்றோர்கள் நினைத்து தமது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். அதற்காக அவர்கள் சிந்தும் வியர்வையும், உழைப்பும் அளவிட முடியாதவை.
ஆனால் சில சந்தர்ப்பங்களில் அந்த எதிர்பார்ப்பு தவிடு பொடியாகி, ஏமாற்றத்தில் முடியும் போது அந்த பெற்றோரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் இயல்பாகவே புரிந்து கொள்ள முடியும்.
வவுனியா பல்கலைக்கழகம்
அப்படியானதொரு சம்பவமே அண்மையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
அனுராதபுரம், ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் தொழில்நுட்ப பாடத்தை கற்கும் முதலாம் வருட மாணவன் ஒருவர் கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை காலை சடலமாக பூவசரன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்ற போதும் உண்மையில் நடந்தது என்ன என்பதை அலசுவதே இந்தப் பந்தியின் நோக்கமாகும்.
கடந்த 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் வவுனியா பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவர்களை இரண்டாம் வருட மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு மாலை 6.30 இற்கு ஆரம்பமாகி இரவு 9.30 உடன் நிறைவு பெறுவதாகவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களுக்கும் அனுமதி
பல்கலைக்கழகத்தின் சில கட்டுப்பாடுகளுடன் அன்றைய தினம் மது அருந்தும் மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருந்தது.
எனினும் குறித்த அரங்க நிகழ்வுகள் 7.30 மணியளவில் ஆரம்பித்து 9.30 உடன் நிறைவடைந்தது. நிகழ்வு நிறைவடைந்ததும் பெண் மாணவிகள் இராப்போசனத்தை எடுத்துக் கொண்டனர்.

ஆண் மாணவர்கள் மேலும் நேரம் கேட்டு இரவு 11 மணிவரை விருந்துபசாரம் இடம்பெற்றது. இதன்போது மதுவும் பரிமாறப்பட்டது.
முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் என 108 மாணவர்கள் குறித்த நிகழ்வில் பங்குபற்றிய நிலையில் மது அருந்தாத மாணவர்கள் தமது உணவினை பெற்று சாப்பிட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்கள் மது விருந்தில் இருந்துள்ளனர். இரவு 9.30 இல் இருந்து 11.00 மணி வரையான குறுகிய நேரமே இருந்ததால் பல மாணவர்கள் விரைவாக மதுபானத்தை அருந்த வேண்டும் என்ற நோக்கில் அங்கு செயற்பட்டு இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
விசாரணை
இதன்போது, மரணமடைந்த குறித்த மாணவனும் மது விருந்தில் பங்கு கொணடு மது அருந்தியதாகவும் சக மாணவர்களுடன் சந்தோசமாக இருந்ததாகவும் அவரது சக மாணவர்கள் கூறுகின்றனர்.
மது கூடியதும் அவரது சக மாணவர்கள் நள்ளிரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த மாணவனை பிறிதொரு மாணவனின் விடுதியில் மாணவர்கள் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

சனிக்கிழமை காலை குறித்த மாணவன் எழுந்திருக்காத நிலையில் ஏனைய மாணவர்கள் குறித்த மாணவனை பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு பூவரசன்குளம் பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் ஆகியோர் சென்று விசாரணைகளை முன்னெடுத்து இருந்தனர்.
இதன்போது மாணவர் உயிரிழந்த போது அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்தமை உறுதி செய்யப்பட்டது.
குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் போது, உயிரிழந்த மாணவரின் சகோதரி, கடந்த 31 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பல வந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகள்
குறித்த மாணவனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனைகள் இடம்பெற்றிருந்த நிலையில் இளைஞனின் உடலில் மதுபானம் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
எனிம் மரணத்திற்கான காரணம் தொடர்பில் மாணவனின் உறவினர்களால் பகிடி வதை காரணம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது இரத்த மற்றும் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசேதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன் மது அருந்துவதில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனினும் கொழும்பு பகுப்பாய்வு அறிக்கைகள் வந்த பின்னரே குறித்த மாணவனுக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளதா? எவ்வளவு காலம் இப் பழக்கம் இருந்துள்ளது? அல்லது மது கட்டாயப்படுத்தி பருக்கப்பட்டதா? என்பதை உறுதிப்படுத்த முடியும்.
அதன் மூலமே மாணவனுக்கு மதுபானம் பலவந்தமாக பருகப்பட்டதா அல்லது தானாக அருந்தினாரா என்பதை உறுபதிப்படுத்த முடியும். பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று அதன் மூலம் பல மாணவர்கள் உயிரை விட்டதும், கல்வியை இடைநிறுத்தியதும் வரலாறு உண்டு.
அந்த அடிப்படையில் குறித்த மாணவனின் மரணத்திற்கும் பகிடிவதை காரணம் என அம் மாணவனின் உறவினர்கள் கூறுகினறனர். அவர்களது எதிர்பார்ப்பு அல்லது சந்தேகம் பிழையென நாம் கூற முடியாது. அது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமே.
பகிடிவதை
இந்தசம்பவம் வவுனியாவில் மட்டுமன்றி இலங்கை பூராகவும் பேசு பொருளாக மாறியுளள நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பொலிசார், சிஐடி மற்றும் பல்கைலைக்கழகம் என்பவற்றால் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
இவ் விசாரணைகளின் மூலமே உண்மை நிலை வெளிப்படுத்தப்படும். எனினும், சரி பிழைகளுக்கு அப்பால் குறித்த மாணவனின் மரணத்திற்கு அவ் மது விருந்து காரணம் என்பதை மறுக்க முடியாது.

கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் பாடசாலைகள், கல்வியற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்பன இவ்வாறான மது விருத்துக்கு இடமளிப்பது சரியா என்ற கேள்வி இயல்பாகவே எல்லோர் மத்தியிலும் எழுகின்றது.
ஒருவேளை அவ் மது விருந்து இடம்பெறா இருந்தால் அந்த மாணவன் இன்று உயிருடன் இருந்திருக்க முடியுமல்லவா. எனவே, கல்வி நிறுவனங்கள் மாணவருக்கு ஒழுக்கதையும், கல்வியையும் மட்டுன்றி வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களையும் போதிக்க வேண்டும் என்பதுடன் இவ்வாறான செய்பாடுகள் எதிர்காலத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களினதும் பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 10 November, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.