வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் அடித்துக்கொல்லப்பட்ட தமிழ் பெண்! நீதி கிடைப்பதில் பாரிய சிக்கல்
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு (OIC) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த சிந்தக்க அனுராத வவுனியாவுக்கு இடமாற்றப்பட்டு சாதாரண சேவையில் இணைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் புலனாய்வுச் செய்திச் சேவையொன்று ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
சலாகா (Salaka) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நெத்தி குமாரவின் மனைவி சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டில் பதுளை, தெமோதரை தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதான ஆர்.ராஜகுமாரி எனும் பெண் வேலை செய்து வந்துள்ளார்.
பொய்க்குற்றச்சாட்டு
கொழும்பில் உள்ள வீடுகளில் பணிபுரிந்துவிட்டுச் செல்லும் ஏழைத் தொழிலாளர்கள் மீது பணம், தங்கம் அல்லது மாணிக்கக் கற்களைத் திருடிவிட்டதாகப் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகக் காணப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தலையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிரான் அலஸுடன் நெருங்கிய தொடர்புடைய பெண் ஒருவர் சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண் மூலமாகப் பாரிய அழுத்தத்தைக் கொடுத்து, ஏழைத் தமிழ் பெண்மணி தன் வீட்டிலிருந்து சென்று இரண்டு நாட்களில் "தங்கக் கடிகாரம் மற்றும் 500 கிராம் தங்கம் திருடிவிட்டார்" எனச் சுதர்மா நெத்தி குமார பொய்க் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அப்பெண் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அன்றைய OIC சிந்தக்க அனுராதவின் காலத்தில் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் உடலில் 34 பலத்த காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் இரண்டு வயதில் ஒரு குழந்தை, 17 வயதில் ஒரு குழந்தை என மூன்று பிள்ளைகளின் தாயாராவார்.
வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவில் சேகரிக்கப்பட்ட சிறை அதிகாரிகளின் தகவல்கள்! கசிந்த இரகசிய குரல் பதிவுகள்
கடும் அழுத்தம்..
இச்சம்பவம் தொடர்பில் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை மேற்கொண்டபோது, அன்றைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏமில் ரஞ்சன் (Emil Ranjan) விசாரணைகளைத் தொடர்ந்து நடத்த விடாமல் டிரான் அலஸ் மற்றும் நெத்தி குமார ஆகியோரால் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதுடன் சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போது இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இருப்பினும், தற்போது இந்த OIC சிந்தக்க அனுராதவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, (RTM 14) உத்தரவின் மூலம் கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏழைப் பெண்ணை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தில் வழக்கினை எதிர்கொண்டு வரும் நபர், V8 சொகுசு வாகனத்தில் வந்தே புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் ஒரு பெரும் ஊழல்வாதி என்றும், ராஜகிரிய மற்றும் வெலிக்கடை பகுதி மக்களுக்கு இவரைப் பற்றி நன்கு தெரியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் 11 ஸ்பா (SPA) மையங்களை நடத்தி வந்ததியாகவும், அவற்றில் இருந்து லஞ்சப் பணம் வசூலித்ததாகவும், இரண்டு ஸ்பா மையங்களைக் ஒப்பந்த அடிப்படையில் (Contract) வழங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இவ்விடயங்கள் வெலிக்கடை பொலிஸாருக்கும், தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தெரியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்த ஏழைப் பெண்ணிற்காகப் பேசுவதற்கு யாரும் முன்வராத நிலையில், ராஜகுமாரியின் வழக்கேட்டுக்கோப்புகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.