லசந்த கொலை விவகாரம்: மிதிகம ருவான் குறித்து விசாரணைகள்
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவை சுட்டுக்கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மிதிகம ருவான் மீது பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, கடந்த 22ஆம் திகதி பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அறையில் அடையாளந்தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
லசந்த விக்ரமசேகர கொல்லப்படுவதற்கு முன்பு, பூஸ்ஸா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிதிகம ருவான் என்பவரால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
லசந்த விக்ரமசேகர வழங்கிய தகவலின் அடிப்படையில் மிதிகம ருவானின் இரண்டு உதவியாளர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சமூக ஊடகங்கள் மூலம் உயிருக்கு அச்சுறுத்தல்
"சமூக ஊடகங்கள் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மிதிகம ருவான் அல்லது ருவன் ஜெயசேகர என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்ட பதிவு தொடர்பில் தனக்கு தெரியும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நபர்களின் பெயர்களை வெளியிட்டு, நான் அவர்களின் நெருங்கிய நண்பர் என்று கூறி, எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டன.

நான் நீதிமன்றத்தில் முன்னிலையாகும்போது அல்லது பிரதேச சபையை விட்டு வெளியேறும் போதும் என்னை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதினை நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகர 2025.08.29 திகதியிட்ட கடிதத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், இதுவரை கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |