நாட்டின் பல பகுதிகளுக்கு வெளியேற்ற சிவப்பு அறிவிப்பு - பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மூத்த புவியியலாளர் டாக்டர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் வெளியேற்ற சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி,
- கண்டி மாவட்டம்: உடுதும்பர, கங்க இஹல கோரளை, தொளுவ, யட்டிநுவர.
- கேகாலை மாவட்டம்: கேகாலை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட, அரநாயக்க.
- மாத்தளை மாவட்டம்: லக்கல பல்லேகம, அம்பன்கங்க கோரளை, உக்குவளை, வில்கமுவ, இறத்தோட்டை.
- இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி ஆகிய இடங்களுக்கு வெளியேற்ற சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பதிவாகும் மழைவீழ்ச்சியின் அளவை பொறுத்து இந்த அறிவிப்புகள் ஓரளவு மாறக்கூடும்.

எனவே, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கின்றோம். நிலச்சரிவு ஏற்படும் பாதைகளில் மண் படிந்துள்ளது. பாறைகள் உள்ளன.
இது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே, அந்த இடங்களைக் கடந்து செல்லும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், மழைப்பொழிவு அதிகரித்தால், அந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, உங்கள் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
கன மழை தொடர்பில் நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தயவு செய்து அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதலாம் இணைப்பு
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்மலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்திற்கான வானிலை நிலரவம் தொடர்பில் இன்றைய தினம் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் மேலும்,
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
பனிமூட்டமான நிலை
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |