எங்களுக்கு நடந்த அநியாயங்களை நாங்கள் மறக்கமாட்டோம்: றவூப் ஹக்கீம்
எங்களுக்கு நடந்த அநியாயங்களை நாங்கள் ஒரு போதும் மறந்து விடவோ கிடப்பில் போடவோ முடியாது. அவற்றுக்கு நியாயம் கோர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - ஏறாவூரில் நேற்று (26.11.2022) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கவாதக் கும்பலைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. ஆனால் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கும்பலின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினால் நினைவுகூரப்படுவதுமில்லை. நினைவுகூரப்பட வேண்டியதுமில்லை.
பெரும்பான்மைச் சமூகத்தின் வெறுப்பு
அந்தப் படுபாதகச் செயலைச் செய்தவர்களுடைய ஜனாஸாக்களைக் கூட நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான் எங்களது முடிவு.
அவர்கள் மேற்கொண்டது முஸ்லிம் சமூகத்தழிற்கான போராட்டமுமல்ல. அது முழுமையாக எங்களுக்குத் தெரியும் அதற்குப் பின்னால் வேறு சக்திகள் இருந்ததுதான் உண்மை.
அந்த மறை கரங்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அது உலகத்திற்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும். இதற்குப் பின்னாலும் சில பெருந்தேசியவாதக் கழுகுக் கூட்டம் இருந்ததா என்பது கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் வெறுப்புணர்ச்சியை முஸ்லிம்கள் மீது தூண்டி அதன் மூலமாக ஆட்சியதிகாரத்தை அடைந்து கொள்வதற்குப் பாடுபட்டவர்கள் தாங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னரும் முஸ்லிம் சமூகத்தைப் படாதபாடு படுத்தினார்கள்.
சர்வதேச சமூகம்
கோவிட் தொற்றினால் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களுக்குச் செய்த அநியாயம் இவ்வாறு அவர்களது வெறுப்புணர்ச்சி எல்லை கடந்து சென்று விட்டது.
இன்னமும் முஸ்லிம்களுக்குள் தீவிரவாதம் ஊடுருவியிருக்கிறது என்று நிரூபிக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். தேவையில்லாத விபரீத விளையாட்டைச் செய்த மறைகரம் சக்தி என்ன என்பது கண்டறியப்பட வேண்டும்.
அதற்கான நியாயம் நீதி எங்களுக்குக் கிடைத்தாக வேண்டும். இவ்வளவு நாசகார, இனவாத, மதவாத வெறுப்புக்களுக்குப் பின்னாலிருந்த மறைகரம் என்ன ? முள்ளிவாய்க்கால் சம்பவம் அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும்.
சரணடைந்தவர்களுடைய உயிர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்வியை இப்பொழுது சர்வதேச சமூகத்திற்கு முன்னால் வைத்திருக்கிறார்கள்.
தீர்வு
எங்களுடைய சமூகத்தின் அப்பாவிகள் நிறையப் பேரைக் கொண்டு போய் இல்லாத பொல்லாத விசயங்களைச் சொல்லி போதாக்குறைக்கு ஜனாஸாக்களையும் போட்டு எரித்தார்கள். இதற்கெல்லாம் என்ன நஷ்டயீட்டை அரசாங்கம் தரப்போகிறது? இதனைச் சும்மா விட முடியாது.
நடந்த அநியாயங்களைக் கண்டறிவிதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைனக்கழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இவற்றுக்கெல்லாம் ஏதொவொரு பொறிமுறையினுடாக முடிவு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.