அரசாங்கம் மொசாடிற்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவாக செயற்படுகின்றது – நிசாம் காரியப்பர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இஸ்ரேலின் மொசாட் மற்றும் அமெரிக்கா என்பனவற்றிற்கு ஆதரவாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் மக்களும் ஈரான் தலைவர்களும் இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் தாயை தலை நிமிர செய்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த தலைவர்களுக்கும் அந்த மக்களுக்கும் தலை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது உயிரையும் தியாகம் செய்வதற்கு தயாராக அவர்கள் நேற்றைய தினம் மனித சங்கலியாக வந்திருந்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது சுயமரியாதைக்காகவும் தங்களது நாட்டுக்காகவும் ஈரான் மக்கள் வெளிப்படுத்திய தியாகத்தை காணும் போது வெட்கமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களாக இருந்தும் இந்த அநீதிக்கு எதிராக எந்தவித குரலும் கொடுக்கவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்ற உணர்வு தங்களை வாட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் ஈரானிய மக்களுக்காக நோன்பு நோற்கவில்லை எனவும் உலமாக்கள் எதனையும் செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்காவை மகிழ்வித்து தங்களது சுயமரியாதையை இழக்கும் முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவினால் ஒருநாள் கைவிடப்படும் என அவர் எச்சரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் வாய்மொழி மூலம் ஈரானுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தாலும் ரகசியமாக மொசாட்டுக்கும் அமெரிக்காவிற்கும் உதவி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தில் 10 - 13 முஸ்லிம்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும் அமெரிக்காவையும் மொசாட்டையும் கண்டிக்க முடியாது இருப்பதாக நிசாம் காரியப்பர் குற்றம் சுமத்தியுள்ளார்.