தமிழ்த்தேசிய கட்சிகளின் அழைப்பை நிராகரிக்கின்றோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியக் கட்சி என்பன விடுத்துள்ள அழைப்பை எமது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நாங்கள் கலந்து கொள்கின்றோம் அல்லது அக்கலந்துரையாடலைப் புறக்கணிப்போம் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசிய கட்சியைச் சேர்ந்த எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரினால் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் முக்கிய கோரிக்கையைக் கடந்த முறை வெளியிட்டிருந்தோம். கொள்கை ரீதியான தமது உண்மையான நிலைப்பாடுகளைக் கட்சிகளும் அறிவிக்க வேண்டும்.
எமது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுக்கு எமது ஆதரவினை வழங்குவதாகவும் எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத கட்சிகளின் கலந்துரையாடலைப் புறக்கணிப்பதாகவும் ஒற்றையாட்சியை எதிர்க்க வேண்டும் என்று ஒன்றிணைந்திருந்தோம்.
அத்துடன் தமது கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள் என உள்ளார்ந்தமாக உணர்ந்திருந்தோம். ஆனால் தற்போது பொதுமக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. கடந்த 74 வருடங்களாகச் சிங்களவர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுவது வீண் வேலை என வரலாறு கூறுகிறது.
இதன் அடிப்படையிலேயே வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்காகச் சிங்களவர்களுடன் ஒப்பந்தம் செய்வது தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், எம்.திருசெல்வம் மற்றும் 1977 இல் வட்டுக்கோட்டையில் இருந்த ஏனைய தமிழ் தேசபக்தர்கள் ஆகியோருக்கு செய்யும் துரோகமாகும்.
சிங்களவர்களுடன் ஒப்பந்தம் போடுவது சர்வதேச அரங்கில் தமிழர்களைப் பலவீனப்படுத்தும். தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை இது உணர்த்தும். இந்த வகையான பார்வை அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அவர்களின் எதிர்கால மத்தியஸ்த நிலையைப் புறக்கணிக்க வைக்கும்.
தமிழ் இளைஞர்கள் சிங்கள இளைஞர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும். தமிழ் இளைஞர்களைப் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்ய இது வழி வகுக்கும். மேலும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தற்போது ஜெனிவாவில் உள்ள ஐ.நா தீர்மானத்தைத் திரும்பப்பெறுவதுபற்றி சிந்திக்கலாம்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடரட்டும். இலங்கை நிதி ரீதியாக உடைந்தால், அது அவர்களை நில அபகரிப்பு, வடக்கு, கிழக்கில் இலங்கை பௌத்த சின்னங்கள் கட்டுதல் மற்றும் சிங்கள இராணுவத்தை வைத்திருப்பதை நிறுத்த செய்யும். இவை நமது தாயகத்தைப் பொருளாதார மந்த நிலையிலிருந்தும், நமது இளைஞர்களைக் குற்றச்செயல்கள் மற்றும் போதைப் பொருட்களிலிருந்தும் விடுவிக்கும்.
மேலும், இந்த இலங்கைப் பொருளாதார நெருக்கடி, தமிழர்களைச் சுதந்திரமாகச் செல்ல
இலங்கையைக் கட்டாயப்படுத்தும்.
எனவே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எமது புத்திஜீவிகளையும்
சிங்களவர்களுடன் கலப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்'' இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.