மட்டக்களப்பில் தினமும் 4 மணி நேரம் நீர் விநியோகம் தடை
வறண்ட வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சைக் குளத்தில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், அங்கு தினமும் 4 மணி நேரம் நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஏ. எம். பி. சி. டி. பண்டாரா, உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக, தினமும் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், நாடு முழுவதும் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் தலைவர் தெரிவித்தார்.
நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த
இலங்கை ஒரு நாளைக்குச் சுமார் 2.8 மில்லியன் கன மீட்டர் நீரை உற்பத்தி செய்கிறது என்றும், அதில் 23 முதல் 24 சதவீதம் பெரிய நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் 65 சதவீதம் ஆறுகள் மற்றும் ஓடைகள் தொடர்பான நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது என்றும், அதில் கிட்டத்தட்ட 600,000 கன மீட்டர் களனி ஆற்றில் இருந்து பெறப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்கள் மட்டுமே வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டத்தின் பிபில மற்றும் மெடகம பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் தலைவர் ஏ. எம். பி. சி. டி. பண்டார தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15