போராட்டம் வெடிக்கும் என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எச்சரிக்கை
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை கடற்படை முகாமிற்காக அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை கடற்படை முகாமிற்காக அபகரித்தால் மக்களோடு இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்குவோம் என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குரிய 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றிற்கு அமைவாக கடற்படையினருக்கு அபகரிப்புச் செய்வதற்கு ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இருப்பினும் அப்போது இந்த அபகரிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணிகளுக்குரிய தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
அதனடிப்படையில் அப்போது அந்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன. அதேவேளை அவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டதுடன், அது தொடர்பான வழக்கு விசாரணைகள் மூன்று வருடங்களைக் கடந்து தற்போதும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன.
இந் நிலையில் முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் 08.07.2021ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் மீண்டும் காணிகளை அளவீடு செய்து கடற்படைக்கு அபகரிக்க இருப்பதாக காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.