வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், பணியகத்தின் எந்தவித அனுமதியுமின்றி சமூக ஊடகங்கள் ஊடாக கலந்துரையாடல்களை நடத்தி இந்தப் பண மோசடிகள் நடைபெறுகின்றன. இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை போலி விளம்பரங்கள்.
சட்ட நடவடிக்கை
அவற்றுக்கு பணியகத்தின் அனுமதி பெறப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதால், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து, சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி உதவியாளர் வேலைகள் வழங்குவதாகக் கூறி, 76 இலட்சம் ரூபா வரையான பணத்தை மோசடி செய்த ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் நேற்று (30) கைது செய்துள்ளனர்.

ஒப்பந்தங்களும் கைச்சாத்து
விசாரணையில் சந்தேகநபர் 3 வருடங்கள் சிங்கப்பூரில் கல்வி கற்றவர் என தெரியவந்துள்ளது. அங்கு அவர் அறிமுகமான ஒரு நிறுவனத்திற்குத் தொழிலாளர்களை அனுப்புவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 5 பேரிடம் பணம் பெற்றுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சட்டத்தரணி முன்னிலையில் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
ஆனால், உறுதியளித்தபடி வேலைவாய்ப்பை வழங்கவில்லை என்பது பணியகத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பணம் கொடுத்த நபர்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அடிப்படையில், வத்தளை, உஸ்வெடகெய்யாவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்த மோசடி செய்தவர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |