வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோருக்கு வரும் இரகசிய அழைப்புக்கள்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
பொலிஸ் அதிகாரிகளின் படங்களைப் பயன்படுத்தியும், அவ்வாறு போலியாக ஆள்மாறாட்டம் செய்தும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, போலி புகைப்படங்களுடன் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இரகசிய விசாரணை
இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது பொலிஸ் விசாரணை பிரிவுகளில் இருந்து அழைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்து வங்கிக்கணக்குகள் பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கு தொடரப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரகசிய விசாரணை நடத்தப்படுவதாகக்கூறி, அதற்கு உதவி செய்தால் விடுவிப்பதாகக் குறிப்பிட்டு வட்ஸ்அப் ஊடாக போலி பொலிஸ் அடையாளச் சின்னங்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் படங்களை அனுப்புதல். 'Verification' (சரிபார்ப்பு) பணிகளுக்காக முடக்கப்பட்ட (Freeze) கணக்குகளை விடுவிக்கக்கோரி வங்கிக் கணக்குகளில் உள்நுழைவதற்காக OTP இலக்கங்களைப் பெற்றுக் கொள்ளுதல், வேறு கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுமாறு பணித்தல் அல்லது USDT போன்ற கிரிப்டோ நாணயங்கள் ஊடாகப் பணத்தைச் செலுத்துமாறு அழுத்தம் கொடுத்துதல் போன்ற செயற்பாடுகளில் மோசடியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள் அல்லது வட்ஸ்அப் ஊடாக தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள், அட்டை இலக்கங்கள், CVV இலக்கம், கடவுச்சொற்கள் அல்லது OTP இலக்கங்களைக் கேட்பதில்லை என்பதால், இத்தகைய தகவல்களைக் கோரும் அழைப்புகள் மோசடியானவை என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கணக்கு முடக்கப்படும் அல்லது வழக்கு தொடரப்படும்
எனவே, கணக்கு முடக்கப்படும் அல்லது வழக்குத் தொடரப்படும் போன்ற அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வேறு கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கியின் அல்லது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலங்கை மத்திய வங்கி ஆகியவை தனிப்பட்ட வட்ஸ்அப் இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை நடத்துவதில்லை என்பதுடன், வங்கிக் கணக்கு இலக்கங்களை வழங்கிப் பணத்தை வைப்புச் செய்யுமாறு கோருவதும் கிடையாது என அறிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான இணைய பயன்பாடுகளை தவிர்க்குமாறும் எச்சரிக்கை
மேலும், அறியாத நபர்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம் வெளியிடப்படும் இணையவழிப் பரிசுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைய பயன்பாடுகளை தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆள்மாறாட்டம் செய்து பணம் பெற முயற்சிக்கும் மோசடி நபர்கள் அல்லது குழுக்கள் குறித்து கணினி குற்ற விசாரணை பிரிவின் இலக்கங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்: 071 - 8592918
கணினி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள்: 071 - 8591765
கணினி குற்ற விசாரணைப் பிரிவு (அலுவலகம்): 011 - 2300756
இதுபோன்ற மோசடிகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரடியாகச் சென்று எழுத்துமூலம் முறைப்பாடு செய்யும் வசதியும் காணப்படுவதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.