பாகிஸ்தானுடனான போர் : போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை முதல் தடவையாக உறுதிப்படுத்திய இந்தியா
2025 மே மாதத்தில் பாகிஸ்தானுடனான மோதல்களின்போது, குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான போர் விமானங்களை இழந்ததை, இந்திய இராணுவம் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் நான்கு நாள் மோதல் அணு ஆயுதப் போரின் கட்டத்தை நெருங்கவில்லை என்றும் இந்திய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி
ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை முக்கியமல்ல, அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதுதான் முக்கியம் என்று இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புத் தளபதி அனில் சவுகான், ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த சாங்க்ரி-லா உரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
போரின் போது, ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் வெளியிட்ட கூற்றுகளை முற்றிலும் தவறானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தியா எத்தனை ஜெட் விமானங்களை இழந்தது என்பதைக் குறிப்பிட மறுத்துவிட்டார். அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன, என்ன தவறுகள் இடம்பெற்றன? என்று கேட்கப்பட்டதற்கு, இதில் எண்ணிக்கை முக்கியமல்ல என்று சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமது தந்திரோபாயத் தவறை நாம் புரிந்துகொண்டு, அதை சரிசெய்து, இரண்டு நாட்களுக்குப் பின்னர், அதை மீண்டும் செயல்படுத்தி, நீண்ட தூரத்தை இலக்காகக் கொண்டு தமது அனைத்து ஜெட் விமானங்களையும் மீண்டும் பறக்கவிட்டதாக ஜெனரல் சவுகான் கூறியுள்ளார்.
ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக
முன்னதாக, போரின்போது, தனது நாடு ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் செரீப் கூறியிருந்தார்.
இருப்பினும், இந்த தகவல், சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை. அதேநேரம், சண்டையில் தமது நாடு விமானங்களை இழந்ததா என்பது குறித்து இந்தியஅரசாங்கம் கருத்து தெரிவிப்பதையும் இதுவரையும் தவிர்த்து வந்தது.
இதற்கிடையில், பாகிஸ்தானுடனான, ஆயுதப் போரைத் தவிர்க்க அமெரிக்கா உதவியது என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்று குறித்து ஜெனரல் சவுகான் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்களின் செயல்திறன் குறித்த பாகிஸ்தானின் கூற்றுக்களை ஜெனரல் சவுகான் குறைத்து மதிப்பிட்டு, அவை பயனற்றவை என்று சவுகான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இரண்டு நாடுகளுக்கும் இடையில், போர் நிறுத்தம் நீடித்து வருவதாகவும், எதிர்கால செயற்பாடுகள், பாகிஸ்தானின் நடவடிக்கைகளைப் பொறுத்தது என்றும் ஜெனரல் சவுகான் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
