ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு: தொற்றால் குழந்தை மரணம்
ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓமிக்ரோன் வைரஸ் துணை திரிபுகளான LF.7 மற்றும் XFG ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான நிபுணர் ஜூட் ஜெயமஹா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜூட் ஜெயமஹா குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் மாறுபாடு
எனினும் இந்த கோவிட் மாறுபாடு குறித்து தேவையற்ற அச்சம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.
கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட நோயாளிகள், பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் முகக் கவசம் அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொவிட் வைரஸின் புதிய வகைகள் அவ்வப்போது பரவுகின்றன, மேலும் இது தொடர்பாக சுகாதாரத் துறை தொடர்ந்து விழிப்புடன் இருப்பதால், தேவையற்ற அச்சம் வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை மரணம்
இதேவேளை, காலி தேசிய மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த ஒன்றரை மாத குழந்தையும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குழந்தையின் உயிரியல் மாதிரி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் இது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.
எனினும் ஆசியாவில் தற்போது பரவி வரும் புதிய திரிபாக இந்த வைரஸ் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
