இறந்ததாக நம்பப்படும் வாக்னர் கூலிப்படையின் தலைவர் உயிருடன் : ரஷ்யாவில் அதிகரிக்கும் பதற்ற நிலை
விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக கூறப்படும் தனியார் இராணுவ படையான வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் தற்போது உயிருடன் நலமோடு இருப்பதாக தெரிவித்துள்ளது போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் தனியார் இராணுவ படையின் தலைவராக இருந்து வருபவர் யெவ்கெனி பிரிகோஷின். இந்த படை ரஷ்ய புடினின் துணை ராணுவ படை என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது. ரஷ்ய இராணுவ படைக்கு வாக்னர் படை பக்கபலமாக இருந்து வருகிறது.
தேச துரோக வழக்கு
தற்போது நடந்து வரும் உக்ரைன் போரில் வாக்னர்படை முக்கிய பங்காற்றி வருகிறது. உக்ரைன் போரின் போது முக்கிய நகரங்களை இந்த படை வீரர்கள் தான் கைப்பற்றினார்கள்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாக்னர் குழு தலைவருக்கும், ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. யெவ்கெனி பிரிகோஷின் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வாக்னர் படையினர் மாஸ்கோவில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர் 2 நாளில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. வாக்னர் குழுவினருக்கு மன்னிப்பு வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ரஷ்யாவின் சதி செயலால் அவர் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில், விமான விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட யெவ்கெனி பிரிகோஷின் காரில் சென்றபடி பேசுவது போன்ற காணொளி வெளியாகி உள்ளது. அதில் அவர் நான் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறேன், நான் நலமாக இருக்கிறேன். இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கூறுவது போல காணொளியில் இடம் பெற்றுள்ளது.
இந்த காணொளி தற்போது ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த காணொளி எங்கு எடுக்கப்பட்டது. எப்போது எடுக்கப்பட்டது? என்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
காணொளியில் அவர் பேசுவது உண்மைதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அவர் உயிரோடு இருக்கிறாரா?அல்லது இறந்து விட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. இந்த புதிய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
